பொறுப்பை உணர்ந்து பணி செய்வேன் :அ.தி.மு.க., வேட்பாளர் அசோக் உறுதி

வேளச்சேரி:''மக்கள் ஓட்டு போட்டு என்னை வெற்றி பெற செய்வதால் கிடைப்பது பதவி அல்ல; பொறுப்பு என உணர்ந்து பணி செய்வேன்,'' என, அ.தி.மு.க., வேட்பாளர் அசோக் கூறினார்.

வேளச்சேரி அ.தி.மு.க., வேட்பாளர் அசோக், பிரசாரத்தின்போது கூறியதாவது:

கடந்த 20 நாட்களாக தொகுதி முழுதும் பிரசாரம் செய்துள்ளேன். செல்லும் இடமெல்லாம், ஏற்கனவே இருந்த இரண்டு எம்.எல்.ஏ.,க்களை, பத்து ஆண்டுகளாக பார்த்ததில்லை என கூறினர். நன்றி தெரிவிக்கக்கூட வந்ததில்லை.

எப்படி எங்கள் பிரச்னையை கேட்க வருவார்கள். நீங்கள் எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது, எங்கள் உணர்வுகளை புரிந்து, கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுத்தீர்கள். அதனால், மீண்டும் நீங்கள் தான் எங்களுக்கு எம்.எல்.ஏ.,வாக வர வேண்டும் என கூறி, அமோக வரவேற்பு கொடுத்தனர்.

ஏற்கனவே இருந்த எம்.எல்.ஏ.,க்களை போல் நான் இருக்கமாட்டேன். தொகுதியில் வீடு இருப்பதால், எப்போது வேண்டுமென்றாலும் என்னை சந்திக்கலாம். உங்களில் ஒருவனாக இருந்த பணி செய்வேன் என உறுதி அளித்தேன்.

மக்கள் ஓட்டு போட்டு என்னை வெற்றி பெற செய்வதால் கிடைப்பது பதவி அல்ல; பொறுப்பு என உணர்ந்து பணி செய்வேன். பட்டா, கிரைய பத்திரம், குடிநீர், கழிவுநீர், வெள்ள பாதிப்பு தடுப்பு, போக்குவரத்து ஒழுங்குபடுத்துவது, அரசு மருத்துவமனை, கலைக்கல்லுாரி, விளையாட்டு மைதானம், போட்டி தேர்வு பயிற்சி மையம் என, பல கோரிக்கைகள் வைத்துள்ளனர்.

இந்த கோரிக்கைகளையும், ஏற்கனவே பத்து ஆண்டுகள் எம்.எல்.ஏ.,வாக இருந்தவர்கள் நிறைவேற்றி கொடுக்காத வாக்குறுதிகளையும் சேர்த்து, நான் நிறைவேற்றி கொடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரசாரத்தின்போது, பகுதி செயலர்கள் கண்ணன், மூர்த்தி, கணேசன், சிவசுப்பிரமணியன், வட்ட செயலர்கள் மற்றும் பா.ஜ.,வில் சாய்ராம் லட்சுமி, சிவகுமார், பா.ம.க.,வில் ஜனார்த்தனன், ஐ.ஜே.கே.,வில் மூகாம்பிகை உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement