சந்தைக்குப்பம் வி.ஏ.ஓ., அலுவலகம் செயல்பாட்டிற்கு வருமா?

புதுச்சேரி: சந்தை புதுக்குப்பத்தில் புதிதாக கட்டப்பட்ட வி.ஏ.ஓ., அலுவலகம், செயல்பாட்டிற்கு வராமல் சேதமடைந்து வருகிறது.

சந்தைப்புதுக்குப்பம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப்பகுதி மக்கள் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு, வருவாய்த்துறை மூலம் சாதி, குடியிருப்பு, குடியுரிமை, வருவாய் உள்ளிட்ட சான்றிதழ்களை வி.ஏ.ஓ., மூலம் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், சந்தை புதுக்குப்பம் பகுதியில் வி.ஏ.ஓ., அலுவலகம் இல்லாததால், 2 கி.மீட்டர் தொலைவில் உள்ள காட்டேரிக்குப்பம், சுத்துக்கேணி கிராமங்களில் அமைந்துள்ள வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு, சென்று சான்றிதழ்களை பெற வேண்டி உள்ளது.

இதையடுத்து, அக்கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று சந்தை புதுக்குப்பம் கால்நடை பராமரிப்பு மருத்துவமனை கிளை அருகே கடந்த 2016ம் ஆண்டு பல லட்சம் ரூபாய் செலவில், புதிதாக வி.ஏ.ஓ., அலுவலகம் கட்டி, திறக்கப்பட்டது.

ஆனால், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரையில் வி.ஏ.ஓ., யாரும், இந்த அலுவலகத்திற்கு வந்து பணிகளை மேற்கொள்ளவில்லை. இதனால், சந்தை புதுக்குப்பத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து, காட்டேரிக்குப்பம், சுத்துக்கேணி கிராமத்திற்கே சென்று சான்றிதழ் பெறும் அவலநிலை நீடித்து வருகிறது.

இதற்கிடையே, புதிதாக அமைக்கப்பட்ட கட்டடம் சேதமடைந்து வருவதுடன், அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் கால்நடைகளை கட்டும் இடமாக மாறிவருகிறது.

எனவே, சந்தை புதுக்குப்பத்தில் கட்டப்பட்டுள்ள அலுவலகத்திற்கு வி.ஏ.ஓ., தினமும் வந்து பணிகளை மேற்கொள்ள வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement