பா.ஜ., விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் புவனேஸ்வரி தி.மு.க., வில் ஐக்கியம்

திருக்கோவிலுார்: விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் புவனேஸ்வரி உள்ளிட்ட பா.ஜ., வினர் தி.மு.க., வில் இணைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருக்கோவிலுார் பா.ஜ., வில் துடிப்புடன் செயல்பட்டவர்கள் பட்டியலில் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் புவனேஸ்வரி, மாநில செயற்குழு உறுப்பினர் அலமேலு, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட தலைவர் செந்தில் உள்ளிட்ட நிர்வாகிகள் அடக்கம்.

ஏப்ரல் 20 ஆம் தேதி வரை பா.ஜ., கூட்டணியில் உள்ள அ.தி.மு.க., வேட்பாளர் பழனிசாமிக்கு ஆதரவாக இவர்கள் செயல்பட்டு வந்த நிலையில், கட்சியில் தங்களுக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை எனக் கூறி அதிலிருந்து விலகி 10க்கும் மேற்பட்டோர் தி.மு.க., மாவட்ட செயலாளரான வேட்பாளர் கவுதம சிகாமணி முன்னிலையில் தி.மு.க., வில் இணைந்தனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தி.மு.க., மாவட்ட துணைச் செயலாளர் முருகன், நகர அவை தலைவர் குணா, முன்னாள் பேரூராட்சி தலைவர் விநாயகமூர்த்தி, நகர மன்ற உறுப்பினர் ரகு உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.

திருக்கோவிலுாரில் பா.ஜ., வின் முக்கிய நிர்வாகிகளாக இருந்த மகளிர் திடீரென தி.மு.க., வில் இணைந்தது விழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜ., வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement