அ.தி.மு.க., வெற்றி தெளிவாக தெரிகிறது: கோகுல இந்திரா

சென்னை: ''அண்ணா நகர் தொகுதியில், அ.தி.மு.க., வெற்றி தெளிவாக தெரிகிறது,'' என, கோகுல இந்திரா பேசினார்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் அ.தி.மு.க., வேட்பாளர் கோகுல இந்திரா, கட்சி நிர்வாகிகளுடன் நேற்று, இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அரும்பாக்கம், ரசாக் கார்டன், வாட்டர் டேக், எம்.எம்.டி.ஏ., காலனி, அமைந்தகரை உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள், அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது, கோகுல இந்திரா பேசியதாவது:

அ.தி.மு.க., வேட்பாளர், அண்ணா நகரில் வெற்றி பெறுவது உறுதி. அது மக்களால் பூர்த்தி செய்யப்பட்ட ஒன்று. என்னை பற்றி விமர்சனம் செய்வதால், சிற்றரசை பற்றி பேசுகிறேன்.

அவர், இந்த ஊர்க்காரர் கிடையாது. இரண்டு முறை தோற்றாலும், நான் அண்ணா நகர் தான் என்பதால் மீண்டும் போட்டியிடுகிறேன்.

கடந்த ஐந்து ஆண்டு தி.மு.க., ஆட்சியில் எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. மீண்டும் உங்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றவுடன், தொகுதியில் முக்கிய பிரச்னையான பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்து, போதை புழக்கம் இல்லாத தொகுதியாக மாற்றுவேன். மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். நிச்சயம் அ.தி.மு.க., அதிக அளவிலான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement