மீன்பிடி தடைகாலம் எதிரொலி: பழவேற்காடில் ஓய்வெடுக்கும் படகுகள்

பழவேற்காடு: மீன்பிடி தடைகாலம் எதிரொலியாக, பழவேற்காடில் மீனவர்கள் தொழிலுக்கு செல்வதை தவிர்த்துள்ளதால், மீன்பிடி படகுகள் கரையோரங்களில் ஓய்வெடுத்து வருகின்றன.

வங்காள விரிகுடா கடற்பகுதியை ஒட்டி, பழவேற்காடு மீனவ பகுதி அமைந்துள்ளது. இங்கு, 35 மீனவ கிராமங்கள் கடலில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும், மீன்கள் இனப்பெருக்கத்திற்காக, ஏப்., 15 - ஜூன் 14 வரை, 61 நாட்களுக்கு மீன்பிடி தடைகாலம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த தடைகாலத்தில், விசைப்படகுகள் மற்றும் இயந்திர படகுகள் ஆழ்கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. மீன்வளத்தை பெருக்க தடைகாலம் உதவுகிறது. அதேசமயம், பைபர் படகுகளுக்கு இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

அதன்படி, கடந்த 15ல் இருந்து, நடப்பாண்டிற்கான மீன்பிடி தடைகாலம் துவங்கியுள்ளது. பழவேற்காடு மீனவ பகுதியில் விசைப்படகுகள் இல்லை. பைபர் படகுகள் மட்டுமே உள்ளன. ஆனால், பழவேற்காடில் பெரும்பாலான மீனவர்கள், மீன்பிடி தடைகாலத்தை பின்பற்றி, தொழிலுக்கு செல்வதை தவிர்த்துள்ளனர்.

இதனால், பழவேற்காடு ஏரி மற்றும் கடற்கரையோரங்களில், மீனவர்களின் படகுகள் மற்றும் வலைகள் பணியின்றி ஓய்வெடுத்து வருகின்றன. மீனவர்கள் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக அமர்ந்து, வலைகளை சீரமைத்து வருகின்றனர்.

Advertisement