பேச்சு, பேட்டி, அறிக்கை

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேச்சு: மத்திய அரசு அவசர கதியில் கொண்டு வந்த தொகுதி மறுவரையறை சட்ட மசோதாவில் பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தோல்வியை தழுவியுள்ளனர். டில்லியில் நிகழ்ந்துள்ள இந்த தோல்வி, மோடிக்கு நிரந்தர தோல்வியாக வேண்டும். பா.ஜ., ஆளும் மாநிலங்களில் தொகுதி எண்ணிக்கையை அதிகரித்து, தென் மாநிலங்களுக்கு துரோகம் இழைக்க நினைக்கிறது மோடி அரசு. ஆனால், தமிழகத்துக்கு 59 எம்.பி.,க்கள் கிடைக்க இருந்ததாகவும், அதை தி.மு.க., - காங்., கூட்டணி கெடுத்துட்டதாகவும் பா.ஜ.,வினர் சொல்றாங்களே... அதுக்கு இவரிடம் விளக்கம் இருக்குமா?







அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் பேச்சு: தொழில் நகரம் என பெயர் பெற்ற கோவை, திருப்பூர் மாவட்டங்கள், தி.மு.க., ஆட்சிக்காலத்தில் பல்வேறு பாதிப்புகளை சந்தித்தன. குறிப்பாக, மின் கட்டண உயர்வு காரணமாக, இரு மாவட்டங்களிலும் நுாற்றுக்கணக்கான சிறு, குறு தொழிற்சாலைகள் நஷ்டமடைந்து மூடப்பட்டன. ஆயினும், தி.மு.க., அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த அதிருப்தியை எல்லாம் போக்கும் விதமாக, வாக்காளர்களுக்கான பண பட்டுவாடாவை தி.மு.க.,வினர், 'டபுள்' மடங்காக்கிடுவாங்க பாருங்க!



தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேட்டி: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலினிடம் நேருக்கு நேராக கேள்வி கேட்டுள்ளேன். என்.எல்.சி.,க்கு நிலம் கொடுத்தோர், சிப்காட் பிரச்னை என, மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். பண்ருட்டி அருகே வேளாண் ஆராய்ச்சி கல்லுாரி கேட்டதற்கு அமைச்சர் பன்னீர்செல்வம் கொடுக்கவில்லை. போதை கலாசாரம் வேண்டாம் என்று கூறினேன். 'அதிகம் பேசுகிறாய்' என்று முதல்வர் கூறினார். 'உங்கள் சீட்டும் வேண்டாம்; நோட்டும் வேண்டாம்' என்று கூறி, கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டேன்.

சீட்டோ, நோட்டோ இவர் எதிர்பார்த்தது கிடைக்காததால், கூட்டணியில் இருந்து வெளியே வந்துட்டு, கொள்கைக்காக வெளியேறினேன்னு சொல்றாரே!


அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலர் சசிகலா பேச்சு: நான் முதல்வர் ஆகும் தருணத்தில், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கினர். நான், பழனிசாமியை முதல்வராக அமர வைத்தேன். அவரும் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. அவருடன் மந்திரியாக இருந்தவர்கள் கூட்டு களவாணிகள். பழனிசாமி எனக்கு துரோகம் செய்தார்; அவருக்கு நன்றி இல்லை.
பழனிசாமியும், கூட இருந்தவங்களும் கூட்டு களவாணிகள் என்றால், அவர்களை தேர்வு செய்த இவங்களை என்ன சொல்லி அழைப்பது?

Advertisement