பழைய இரும்பு பொருள் விற்பனை ரயில்வேக்கு ரூ.6,813 கோடி வருவாய்

சென்னை:'கடந்த நிதி ஆண்டில், பழைய இரும்பு உதிரி பொருட்களை விற்பனை செய்ததன் வாயிலாக ரயில்வேக்கு, 6,813 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது' என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து, அவர்கள் கூறியதாவது:

கட்டணங்களை உயர்த்தாமல் இதர வழிகளில் வருவாயை அதிகரிக்க, ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ரயில்வேக்கு சொந்தமான இடங்களை தனியாருக்கு நீண்ட காலத்துக்கு குத்தகைக்கு விடுதல், ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் விளம்பரம் செய்தல், சரக்குகள் கையாளும் 'ஷெட்டு'கள் அமைத்தல், பார்சல் ரயில்களின் சேவை அதிகரிப்பு என, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

மற்றொருபுறம் பழைய இரும்பு கழிவுகள், தேவையற்ற உதிரி பொருட்கள் தரம் பிரித்து விற்பனை செய்யப்படுகின்றன.

ரயில்வே பணிமனைகள், யார்டுகள் மற்றும் பட்டறைகளில் தேங்கி கிடக்கும், பழைய இன்ஜின்கள், பெட்டிகள், வேகன்கள், ரயில் தண்டவாளங்கள் மற்றும் பிற பொருட்கள் விற்கப்படுகின்றன. இது ரயில்வே துறைக்கு, வருவாயை ஈட்டி தருவதோடு, இட வசதியையும் ஏற்படுத்தி தருகிறது .

கடந்த நிதி ஆண்டில், பழைய இருப்பு மற்றும் பழைய உதிரி பொருட்களை விற்பனை செய்ததன் வாயிலாக, 6,813.86 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. மத்திய அரசு 6,000 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயித்த நிலையில், அதை தாண்டி விற்பனை நடந்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement