போலீஸ் கமிஷனர் பெயரில் பணம் கேட்டு சைபர் மோசடி

பெங்களூரு: பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் சிங் படத்தை பயன்படுத்தி பணம் கேட்டு மிரட்டி சைபர் மோசடி செய்ய முயன்றது வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.

டிஜிட்டல் கைது எனும் பெயரில் ஏராளமான மோசடிகள் நடக்கின்றன. அவ்வகையில், பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் சிங் படத்தை பயன்படுத்தி 'வாட்ஸாப்' மூலம் சைபர் மோசடி செய்ய முயன்றது வெளிச்சத்திற்கு வந்து உள்ளது. அதாவது, சைபர் திருடர்கள் கமிஷனர் படத்தை பயன்படுத்தி வாட்ஸாப் மூலம் பலருக்கு மெசேஜ் அனுப்பினர்.

அதில், பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் சிங் பேசுவதாக பணம் கேட்டு மிரட்டினர். பணம் தரவில்லை என்றால் கைது செய்யப்படுவீர் என கூறப்பட்டு உள்ளது.

இது போன்ற மெசேஜ் வந்த சிலர், சைபர் போலீசிடம் புகார் அளித்தனர். இதன் பேரில், சைபர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணையை துவக்கியுள்ளனர்.

இது குறித்து சைபர் போலீசார் கூறியதாவது:

கமிஷனர் போல நடித்து பணம் கேட்டு மிரட்டிய 'வாட்ஸாப்' எண் கிடைத்து உள்ளது. இந்த எண்ணை அடிப்படையாக வைத்து விசாரணை துவங்கி உள்ளது.

இச்செயலுக்கு பின் உள்ள அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவர். மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். போலீஸ் அதிகாரிகள் பணம் கேட்டு மிரட்டு மாட்டார்கள். இதுபோன்ற மெசேஜ்களுக்கு யாரும் பதில் அளிக்க வேண்டாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement