மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் தான் மாநில வளர்ச்சி அதிகரிக்கும்: ஆந்திர முதல்வர்

14

சென்னை: ''மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டால் தான், மாநில வளர்ச்சி நன்றாக இருக்கும்,'' என, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

சென்னையில் நேற்று, அவர் அளித்த பேட்டி:

தொகுதி மறுவரையறை மசோதாவை தோற்கடித்து விட்டதாக, ராகுலும், தமிழக முதல்வர் ஸ்டாலினும் கூறுகின்றனர். இது, என்ன மாதிரியான வெற்றி என்பதை, அவர்கள் தான் கூற வேண்டும். அவர்கள், மகளிருக்கு துரோகம் செய்து விட்டனர்.

நான், கடந்த 1995ல் ஆந்திராவின் ஹைதராபாதில், தகவல் தொழில்நுட்ப துறைக்கு முன்னுரிமை அளித்த போது, சென்னை, பெங்களூரு, புனே, குருகிராம் நகரங்களை முன்மாதிரியாக பார்த்தேன். இன்று, ஹைதராபாத், பெங்களூரு உயர் நிலைக்கு சென்று விட்டன; சென்னையை பற்றி யாரும் பேசுவதில்லை.

பிரதமர் மோடி, இந்தியாவை வல்லரசு நாடாக உருவாக்க விரும்புகிறார். உலக பொருளாதார வளர்ச்சி விகிதத்தில், 11வது இடத்தில் இருந்த இந்தியா, இன்று நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கூட்டணி ஆட்சி செய்யும்போது, இரட்டை இன்ஜின் அரசின் வேகத்தை நான் பார்த்திருக்கிறேன்.

மோடி தலைமையிலான மத்திய அரசு, தமிழகத்திற்கு கடந்த, 12 ஆண்டுகளில், 14 லட்சம் கோடி ரூபாய் வழங்கியுள்ளது. மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்கு, 9,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படவில்லை. மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டால் தான், மாநில வளர்ச்சி நன்றாக இருக்கும். தமிழக மக்கள் அறிவுப்பூர்வமாக சிந்தித்து தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஓட்டளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement