அண்ணாமலை, வானதி ஒரே ஸ்கூட்டரில் பிரசாரம்; பா.ஜ., தொண்டர்கள் மலர் துாவி ஆரவாரம்

47

கோவை: அண்ணாமலை, வானதி சீனிவாசன் ஒரே ஸ்கூட்டரில் சென்று கோவை கணபதியில் இறுதி கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.


கோவை வடக்கு தொகுதி பா.ஜ.,வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து, பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இருசக்கர வாகனப் பேரணி நடந்தது.
கணபதி சிவசக்தி காலனியில் துவங்கி, பாரதி நகர், விளாங்குறிச்சி சாலை, மணியகாரம்பாளையம், கண்ணப்ப நகர், கிருஷ்ணம்மாள் வீதி வழியாக வாகன பேரணி சென்றது.

அண்ணாமலையுடன், வானதி ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்து சென்று வாக்காளர்களிடம் தாமரை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டுகோள் விடுத்தார். வாக்காளர்கள் மலர்துாவி ஆரவாரம் செய்தனர்.



அப்போது, அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தல் கருத்து கணிப்பு நமக்கு சாதகமாகியுள்ளது. மத்திய அரசு நிதியை பயன்படுத்தும் அரசு மாநிலத்துக்கு வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர்.


தி.மு.க. வன்முறை அரசியலை கட்டவிழ்த்து விட்டுள்ளது. செந்தில் பாலாஜி எப்போது அவரது தவறை ஏற்றுக் கொண்டுள்ளார். நாளை மறுநாள் வரை காந்தியவாதி மாதிரி பேசுவார். ஏப். 23 அன்று மக்கள் அவரது முகத்திரையை கிழிப்பார்கள்.


தேர்தல் கமிஷன் ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும், அதற்கு போதுமான அதிகாரிகளையும் பணியாளர்களையும் நியமிப்பதோடு, அவர்களது பணியை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்று வாக்காளர்கள் எதிர்பார்க்கின்றனர்.


வெளியூர்காரர்களை கோவையிலிருந்து வெளியேற்ற வேண்டும். கோவை வடக்கு தொகுதியில், 5,000 ரூபாய் அல்ல எவ்வளவு அதிக பணம் கொடுத்தாலும் வானதியை தோற்கடிக்கமுடியாது. அவரது வெற்றி வாக்காளர்களால் உறுதிசெய்யப்பட்டுவிட்டது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Advertisement