இதே நாளில் அன்று

ஏப்ரல் 23:

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், பள்ளபட்லா கிராமத்தில், ராமமூர்த்தி - சத்யவதி தம்பதியின் மகளாக, 1938ல், இதே நாளில் பிறந்தவர், எஸ்.ஜானகி.

நாதஸ்வர மேதை பைடிசாமியிடம் இசை கற்று, சிறு வயதிலேயே சென்னைக்கு வந்தார். ஏ.வி.எம்., ஸ்டூடியோவில் பாடகியாக பணியில் சேர்ந்து, 1957ல் வெளியான, விதியின் விளையாட்டு படத்தில், 'பெண் என் ஆசை' எனும் பாடல் வாயிலாக பாடகியானார்.

குழந்தைத்தனம், குதுாகலம், ஏக்கம், நையாண்டி, முதுமை, சோகம் உள்ளிட்ட பாவங்களை குரலில் குழைத்து, தென்மாநில மொழிகளுடன் கொங்கணி, துளு, ஹிந்தி, சமஸ்கிருதம், சிங்களம், ஆங்கிலம் உள்ளிட்ட, 17 மொழிகளில், 50,000 பாடல்களை பாடியுள்ளார்.

இவரது, 'செந்துாரப்பூவே, சின்னத்தாயவள், சுந்தரி கண்ணால், இஞ்சி இடுப்பழகா, நெஞ்சினிலே' உள்ளிட்ட பாடல்கள் இன்றும் இனிப்பவை. நான்கு தேசிய விருதுகள், கேரள விருதுகள் 14, ஆந்திர விருதுகள் 10, தமிழக அரசின் ஏழு விருதுகளை பெற்ற இவர், 2013ல் கிடைத்த பத்மபூஷண் விருதை நிராகரித்தார்.

'கான கோகில'த்தின் 88வது பிறந்த தினம் இன்று!

Advertisement