ஹார்முஸ் ஜலசந்தியை எப்படி பாதுகாக்கலாம்; 30 நாடுகள் ஆலோசனை

4

லண்டன்: ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது மற்றும் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து ஆலோசிக்க, 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் ராணுவ அமைச்சர்கள், ராணுவ தளபதிகள் பங்கேற்கும் இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டம் லண்ட னில் நேற்று தொடங்கியது.

மேற்காசிய நாடான ஈரான் மீதான போரால், ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. உலகளாவிய எரிசக்தி வினியோகத்தில் மிக முக்கியமான பாதையாகக் கருதப்படும் இந்த ஜலசந்தியில், கப்பல் போக்குவரத்தை மீண்டும் பாதுகாப்பாக தொடங்குவதற்கு, ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஒருங்கிணைந்த ஒரு புதிய திட்டத்தை வகுப்பதற்கான முயற்சியை முன்னெடுத்துள்ளன.

கூட்டணி நாடுகளின் உதவி தங்களுக்குத் தேவையில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியிருந்த நிலையில், ஐரோப்பா, ஆசியா மற்றும் மேற்காசியாவைச் சேர்ந்த 50 நாடுகள் பிரிட்டனின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தன.

அதன்படி ஏற்கனவே, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்த ஆலோசனையைத் தொடர்ந்து, நேற்று பிரிட்டன் தலைநகர் லண்டனில் நேரடி கூட்டம் தொடங்கியது. இரண்டு நாள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், 30 நாடுகளைச் சேர்ந்த ராணுவ அமைச்சர்கள், ராணுவத் தளபதிகள் பங்கேற்றுள்ளனர்.

வணிகக் கப்பல்கள் எவ்வித அச்சமுமின்றி அந்தப் பாதையில் பயணிக்கத் தேவையான பாதுகாப்பை வழங்குவது, கூட்டுப் படைகள் நிறுத்தப்பட்டால், அவற்றின் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் நாடுகளுக்கு இடையேயான ராணுவத் திறன் பகிர்வு எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது உள்ளிட்ட விஷயங்கள் அங்கு விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலையான போர் நிறுத்தம் ஏற்பட்டவுடன், தாமதமின்றி உடனடியாக இந்தப் பாதையை பாதுகாப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான திட்டம், இந்த கூட்டத்தின் வாயிலாக வகுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement