ஸ்ரீகாமாட்சியம்மன் பொங்கல் வசந்த உற்சவம்

திருப்பூர்: திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள ஸ்ரீ காமாட்சியம்மன் கோவிலில், பொங்கல் வசந்த உற்சவ விழா ஏப்ரல் 26 அன்று மஹா சண்டி ஹோமத்துடன் விமரிசையாகத் துவங்கியது. முன்னதாக மஹா கணபதி ஹோமம் மற்றும் வாஸ்து சாந்தி பூஜைகள் நடந்தன. திருப்பரங்குன்றம் ராஜா பட்டர் தலைமையில், கூனம்பட்டி கல்யாணபுரி ஆதினம் ராஜலிங்க சரவண மாணிக்க சுவாமிகள்; அவிநாசி வாகீசர் மடாலயம் காமாட்சிதாச சுவாமிகள் முன்னிலையில் நடந்த இந்தப் பூஜையில், அம்மன் மஹா சண்டிகாதேவி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

ஏப்ரல் 26 காமாட்சியம்மன் மண்டப வளாகத்தில் விநாயகருக்குச் சிறப்பு பூஜை நடக்கிறது; ஏப்ரல் 28 ல் அவிநாசியிலிருந்து தீர்த்தம் எடுத்து வருதல் மற்றும் அம்மை அழைத்தல் நிகழ்வும் நடைபெற உள்ளன. அரண்மனை பொங்கல், மாவிளக்கு மற்றும் அலகு குத்தி தேர் இழுக்கும் நிகழ்ச்சி வரும் 29-ம் தேதியும்; தர்ம கல்யாணம் மற்றும் பூச்சொரிதல் விழா 30-ம் தேதியும் நடைபெறவுள்ளன. மே 1-ம் தேதி சித்ரா பவுர்ணமி நிலவில் ஸ்ரீசக்ர ரதத்தில் அம்மன் திருவீதியுலா வருவார்.

மே 2-ம் தேதி மஞ்சள் நீர் அபிஷேகமும், 3-ம் தேதி திருவிளக்கு பூஜை மற்றும் வெள்ளி ஊஞ்சல் உற்சவமும் நடைபெறும். மே 4-ம் தேதி காலை முதல் மாலை வரை அன்னதானம் நடைபெறும்; அன்றிரவு மஹா அபிஷேகத்துடன் விழா நிறைவுபெறும்.

Advertisement