செக் போஸ்ட்

*குறை கூறுவது ஏன்?

படிக்கும் ஏழை மாணவர்களுக்கு முனிசி.,யில் மூன்று வருஷமா கல்வி உதவித் தொகை வழங்கலன்னு அதன் தலைவரா இருந்தவரே குறைக் கூறி இருக்காரு. பதவி, அதிகாரம் இருந்த போது ஸ்காலர்ஷிப் வழங்க வேண்டியவர், அவருடைய அதிகாரத்தை முறையா பயன் படுத்தினாரா. அவர் யார் மீது குற்றம் சொல்றாரு. புல் மார்க்கெட் கடைகளை இடிக்க இவரை ஏவி விட்டாங்களே, இவர் கொஞ்சமாவது சுயமா சிந்திக்க வேணாமா. கடைகளில், குடியிருக்கும் வீடுகளில் வசித்தவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்தாரா. இடி அமீனை மிஞ்சிட்டாரே.

அந்த பாவம் தான் அவரை தேளாக கொட்டியது. இடிக்க, ஏவிய கூட்டத்தை விட்டு அவரே விலக நேர்ந்தது. இடமாறிய இடத்திலும் கூட அதே தவறை இவர் செய்யாமல் இருப்பாரா அல்லது ராஜாவா இருக்க வேண்டியவர் தாஜா செய்ய கூஜா துாக்குவாரான்னு ஜனங்க பேசிக்கிறாங்களே..

***



*கிராமத்து ஆதிக்கம்

பி.யு.சி., தேர்வுல அதிக மதிப்பெண் வாங்கினவங்க லிஸ்ட்டை கல்வித் துறை ஆபீசர்களை கேட்டிருந்தாலே கிடைச்சிருக்கும். ஒரே நேரத்தில் பாராட்டி, இருக்கலாம். ஆனால், கோல்டு சிட்டியில் அதிக மதிப்பெண் வாங்கியவர்களை விட்டுத் தள்ளி, கிராமத்தில் உள்ளவங்க தேடி பார்த்து பாராட்டினது பெரிய விமர்சனத்துக்கு வழியானது. கை கட்சியில் இருந்து ஓடிப்போன புதிய பூக்காரர், அசெம்பிளிக் காரரை தாறுமாறா பேச வெச்சது. திறமையில் ஜாதி சாயல் காட்டி, அவமதிப்பு செய்ததாக குத்தி காட்டினாரு.

சிட்டி பகுதியில் சுரங்க குடியிருப்பு பகுதி உட்பட 90 சதவீதம் மதிப்பெண் எடுத்த 200 பேருக்கு அசெம்பிளிக்காரர் பாராட்டினாரு. அப்பவும், அந்த கூட்டத்தில் வில்லேஜ்காரங்களோட ஆதிக்கமே ஆட்டம் போட்டது.

அசெம்பிளிக்காரர் கிராமத்தில் ஏதாச்சும் விழா நடந்தால் அங்கு சிட்டிக்காரர்களை கண்டுக்காமல், அலட்சியம் செய்ற போக்கை எப்போ கைவிடப்போறாங்களோ என அவருடன் இருந்த கூட்டம் தான் கதை அளக்கிறது.

***

*யாருக்கு லாபம்?

பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பு போல சி.எம்., அரசியல் செயலர் பதவியில் இருந்தவரின் நாற்காலியை பறிச்சிட்டாங்க. இதனால் கோல்டு சிட்டியில் வருத்தப் பட்ட சிலர் மட்டுமே, ஊர்வலமா வந்தாங்க. ஆனால், பெரும்பாலான 'அம்மா' விசிறிகளுக்கு கொண்டாட்டம் தானாம். ஏன்னா, அம்மாவோட, அவரின் நைனாவோட அதிகார விருப்பங்கள் ஈடேற விடாமல் தடுக்கிற இடத்தில் பவர் ஸ்டேஷனாக இருந்தவரின் பதவி பறிபோயிருப்பது டபுள் கொண்டாட்டம் தானாம். டி.சி.எம்., அணியில் இடம் பிடித்தவங்க வரிசையில் கோல்டு சிட்டியும் உண்டாமே. செங்கோட்டையின் கோலார் தொகுதி தேர்தலில் கவுத புத்தரின் தோல்விக்கு காரணமா இருந்தவங்க பேர்ல அப்போ ஒழுங்கு நடவடிக்கை ஏன் எடுக்கல. சீனிவாசப்பூர் அசெம்பிளி தேர்தல்ல கைக்காரர் தோல்விக்கு மூளையாக இருந்தவர் பேரில் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஏன் வேலை தரல. துரோக பாலிடிக்சின் ஆணி வேராக இருக்கிறவங்க மீது மேலிட பார்வை ஏன் படரவில்லை.

***



*ரூ.100 கோடி ஊழல்

ஒரு சொட்டு நீரும் வந்து சேராத அம்ருத்சிட்டி குடிநீர் திட்டத்துக்கு 60 கோடி ரூபாய் செலவழிச்சிருக்காங்கன்னு புல்லுக்கட்டுக் காரங்க ஊழல் குற்றச்சாட்டை வெளிபடுத்தி இருக்காங்க. கடந்த 5 ஆண்டுகளில் 100 கோடி ரூபாய் விழுங்கி இருக்காங்கன்னு தெரிவிச்சிருக்காங்க. இவங்களாச்சும் இப்போதாவது வாய் திறந்து பேச வந்திருக்காங்களே. மற்ற கட்சிகள் தேர்தலோடு தேர்தலில் மட்டுமே ஓட்டுக்காக விழிப்பாங்களா அல்லது இவங்களுக்கும் ஊழலில் பங்கு போய் சேருதோ.

Advertisement