புத்தக தினத்தில் ஒரு ஜனநாயகக் கடமை 'ஓட்டை விற்பது ஆன்மாவை அடகு வைப்பதற்கு சமம்'
'ஒரு புத்தகத்தைத் திறப்பவன், ஒரு புதிய உலகைத் திறக்கிறான்'. காகித வாசனை வீசும் புத்தகங்கள் மனிதனின் உற்ற நண்பன் என்பதை உணர்த்தவே, ஆண்டுதோறும் ஏப்ரல் 23-ம் தேதியை 'உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினமாக' யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
வாக்கும்... அறிவும்: புத்தக தினமான இன்று, தமிழக சட்டசபை தேர்தலும் நடப்பது ஒரு கூடுதல் சிறப்பு. 'புத்தகங்கள் அறிவைத் தருகின்றன' என்றால், அந்த அறிவின் முதிர்ச்சியே ஒரு வாக்காளனின் சரியான தேர்வாக இருக்க முடியும். தேர்தலையும் புத்தகத்தையும் அறிஞர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?
மகாத்மா காந்தி: மகாத்மா காந்தி தனது எழுத்துகளில், தேர்தலை ஒரு வெறும் புள்ளிவிவரப் போட்டியாகவோ அல்லது எண்களின் விளையாட்டாகவோ ஒருபோதும் பார்த்ததில்லை. வாக்களிப்பது என்பது ஒரு மனசாட்சியின் தேர்வாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மக்களாட்சியில், ஒரு தனி மனிதன் தனது வாக்கை பணத்திற்காகவோ அல்லது அச்சத்தின் காரணமாகவோ விற்பது என்பது, தனது ஆன்மாவையே அடகு வைப்பதற்குச் சமம் என்பதே காந்தியடிகளின் வாதம். தேர்தல் நேரத்தில் வழங்கப்படும் கையூட்டு, ஒரு தேசத்தின் தார்மீக முதுகெலும்பையே தகர்த்துவிடும் என்பதை அவர் ஆணித்தரமாகச் சுட்டிக்காட்டினார்.
அண்ணல் அம்பேத்கர்: 'கற்பி, ஒன்று சேர், புரட்சி செய்' என்ற முழக்கத்தில், அம்பேத்கர் முதலில் வைத்த 'கற்பி' என்பது புத்தகங்கள் வாயிலாகப் பெறும் அறிவையே குறிக்கும். தேர்தல் என்பது வெறும் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதல்ல; அது ஒரு சமூக மாற்றத்திற்கான கருவி என்றவர், 'ஒரு மனிதன், ஒரு வாக்கு, ஒரு மதிப்பு' என்ற தத்துவத்தை உலகுக்கு வழங்கினார். கல்வியறிவு பெற்ற ஒரு வாக்காளன், தன் வாக்கை விற்பது என்பது அவனது சொந்த உரிமையையும், சந்ததியினரின் எதிர்காலத்தையுமே விற்பதற்குச் சமம்.
தத்துவஞானி பிளேட்டோ: கிரேக்கச் சிந்தனையாளரான பிளேட்டோ ஒரு நுட்பமான எச்சரிக்கையை விடுத்தார்: அரசியலில் ஈடுபட மறுப்பதன் மூலம் உங்களுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய தண்டனை, உங்களை விடத் தகுதியற்ற ஒருவர் உங்களை ஆட்சி செய்வதுதான். வாக்குப்பதிவு நாளில் சோம்பேறித்தனம் கொண்டோ அல்லது 'யார் ஜெயித்தால் நமக்கென்ன?' என்று ஒதுங்கி இருப்பதோ, தகுதியற்றவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற நாமே சிவப்புக் கம்பளம் விரித்துக் கொடுப்பதாக முடிந்துவிடும்.
சிந்தனையாளர் தாமஸ் ஜெபர்சன்: அமெரிக்காவின் முன்னாள் அதிபரான இவர், அறியாமையில் இருந்துகொண்டு ஒரு தேசம் சுதந்திரத்தை எதிர்பார்க்கிறது என்றால், அது ஒருபோதும் நடக்காத ஒன்றை எதிர்பார்க்கிறது என்று அர்த்தம் என்றார். நம்மைச் சுற்றியுள்ள அரசியல் மாற்றங்களை அடையாளம் காணவும், தேர்தல் நேரத்துப் பொய்யான வாக்குறுதிகளைப் பிரித்தறியவும் அடிப்படை அறிவு அவசியம். அறியாமை படர்ந்திருக்கும் இடத்தில் ஜனநாயகம் ஒருபோதும் தழைக்காது.
@block_B@ சிந்தனைத் தெளிவே சிறந்த தேர்வு ஒரு புத்தகத்தைப் புரட்டும்போது நமக்குக் கிடைக்கும் தெளிவு, வாக்குச் சாவடியில் பொத்தானை அழுத்தும்போது இருக்க வேண்டும். நல்ல புத்தகங்கள் எப்படிச் சிந்திக்கத் துாண்டுகின்றனவோ, அதுபோலவே வேட்பாளரின் கடந்த கால செயல்பாடுகளைச் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். 'விழிப்புணர்வுள்ள வாக்காளனே நாட்டின் பலம்' என்பதே அறிஞர்கள் கூறும் கருத்தின் ஒற்றைப்புள்ளி!block_B
மேலும்
-
சாக்லேட் கொடுத்து வாக்காளர்களை வரவேற்ற ரோபோ; தமிழக தேர்தல் ஸ்பெஷல்
-
தமிழகத்தில் வெயில் 3 டிகிரி அதிகரிக்கும்
-
ஓட்டு இயந்திரம் பழுது; துவங்கிய சில நிமிடங்களிலேயே ஓட்டுப்பதிவு நிறுத்தம்
-
மதுரையில் 7 பேர் கொல்லப்பட்ட வழக்கு 9 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை
-
நகை கடைகளுக்கு இன்று விடுமுறை
-
கஞ்சா கடத்தல் முக்கிய குற்றவாளி ஆறு ஆண்டுகளுக்கு பின் கைது