பூந்தமல்லி பசுமை ஓட்டுச்சாவடிகளில்  வாக்காளர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

திருமழிசை: பூந்தமல்லி தொகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் அமைக்கப்பட்ட பசுமை ஓட்டுச்சாவடிகளில் மக்கள் ஆர்வமுடன் ஓட்டளித்தனர்.

திருவள்ளூர் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான பிரதாப், பூந்தமல்லி சட்டசபை தொகுதியில் திருமழிசை, ஆண்டரசன்பேட்டை ஆகிய பகுதிகளில் பசுமை ஓட்டுச்சாவடி அமைக்க உத்தரவிட்டார். இதையடுத்து திருமழிசை, நேமம், ஆண்டரசன்பேட்டை ஓட்டுச்சாவடி மையங்களில், வாக்காளர்களை கவரும் வகையில், 'பசுமை ஓட்டுச்சாவடி'யாக அதிகாரிகள் மாற்றியிருந்தனர்.

இந்த பசுமை ஓட்டுச்சாவடி மையத்தின் முன்பகுதி முழுதும் பந்தல் அமைக்கப்பட்டு, பசுமையான இலை தழைகள், தென்னங்குருத்துக்கள் கட்டி தொங்க விடப்பட்டுள்ளன. நுழைவாயில் பகுதியில் வாழை மரங்கள் மற்றும் மாவிலை தோரணங்கள் கட்டி ஓட்டுச்சாவடி மையம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

வாக்காளர்களின் வசதிக்காக குடிநீர் மற்றும் நிழற்பந்தல் வசதி, குழந்தைகள் விளையாடும் வசதி உட்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. இதனால், பசுமை ஓட்டுச்சாவடி மையத்தில் ஓட்டளிக்க வாக்காளர்கள் வெயிலை பொருட்படுத்தாமல் குவிந்தனர்.

ஓட்டளிப்பதை யாரும் பார்க்காத வகையில், மூங்கிலால் ஆன ஓட்டுப்பதிவு அறை அமைத்தல், ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு விதைகளாலான காகிதத்தில் அடையாள அட்டை வழங்குதல உட்பட பல்வேறு பணிகளை, கலெக்டர் பிரதாப் மேற்கொண்டிருந்தார். இந்த பசுமை ஓட்டுச்சாவடி மையத்தில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் ஓட்டளித்து, 'செல்பி' எடுத்துக் கொண்டனர்.

Advertisement