தருமபுரம் ஆதீனத்திற்கு கடலூர் தனியார் மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்திற்கு கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிக்சை அளிக்கப்பட்டது.

மயிலாடுதுறை தருமபுரத்தில் குருஞான சம்பந்தரால் 16ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட சைவ ஆதீனங்களில் முதன்மையான தருமபுரம் ஆதீனம் அமைந்துள்ளது. தருமபுரம் ஆதீனத்தின் 27வது குருமஹா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரம்மாசாரிய சுவாமிகள் அருளாட்சி செய்து வருகிறார்.

சீர்காழி சட்டை நாதர் கோவிலில் நடந்த திருமுலைப்பால் விழாவில் கலந்து கொண்ட குரு மகா சன்னிதானத்திற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட குரு மகா சன்னிதானத்தை டாக்டர் அருண் பிரசாத் பரிசோதனை செய்தார்.

அப்போது இருதய ரத்தக்குழாயில் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்குப் பின்னர் தற்போது தருமபுரம் ஆதீனம் குரு மகா சன்னிதானம் நலமுடன் உள்ளார்கள் என தருமபுரம் ஆதீனம் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement