ஓட்டளிக்க முடியவில்லை: வனத்துறையினர் ஏமாற்றம்

குன்னுார்: நீலகிரி மாவட்டத்தில் காட்டு யானைகள், காட்டெருமைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் அவற்றை கண்காணித்து விரட்டும் பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், காட்டுத்தீ காரணமாக குன்னுார், கோத்தகிரி உட்பட பல இடங்களில் உள்ள வனத்துறையினர் சிங்காரா, கிளன்மார்கன், சிறியூர் பகுதிகளில் பணியாற்ற சென்றனர். வன விலங்குகள் நடமாட்டம் உள்ள ஓட்டுச்சாவடி பகுதிகளில் மக்கள் செல்லும் பாதைகளில் வனத்துறையினர் கண்காணிப்பு பணிக்கு அமர்த்தப்பட்டனர்.

இந்த பணிகளில் ஈடுபட்ட வனத்துறையினருக்கு தபால் ஓட்டுக்கள் இல்லாததால், பலரும் ஓட்டளிக்க முடியாமல் ஜனநாயக கடமையை நிறைவேற்ற முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.

'100 சதவீத ஓட்டுப்பதிவு' என, விழிப்புணர்வு செய்யும் அதிகாரிகள், இந்த நடைமுறை சிக்கல்களை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவில்லை. அடுத்த முறையாவது, வனப்பகுதிக்கு செல்லும் ஊழியர்களுக்கு தபால் ஓட்டு வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement