ரெடி மிக்ஸ் கான்கிரீட் ஆலைக்கு அனுமதி பெறவில்லை: மாசு கட்டுப்பாட்டு வாரியம்

சென்னை: சோழிங்கநல்லுாரில் இயங்கிய ரெடி மிக்ஸ் கான்கிரீட் ஆலைக்கு அனுமதி பெறப்படவில்லை என, தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தின் கேள்விக்கு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

'சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சோழிங்கநல்லுாரில் உள்ள ரெடி மிக்ஸ் கான்கிரீட் ஆலையால் ஏற்படும் துாசி, அதிக ஒலியால் சுற்றுப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகமான கனரக வாகனங்கள் வந்து செல்வதால் சாலைகளும் சேதமடைந்துள்ளன.

எனவே, ரெடி மிக்ஸ் கான்கிரீட் ஆலையை மூட உத்தரவிட வேண்டும்' என, வைபிரன்ட் பெண்கள் நலச்சங்கம், தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது.

இதை விசாரித்த தீர்ப்பாயம், இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.

அதன்படி தீர்ப்பாயத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த அறிக்கை:

சோழிங்கநல்லுாரில் பகிங்ஹாம் கால்வாய் கரையோரத்தில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் தனியார் நிறுவனம், சட்ட விரோதமாக ரெடி மிக்ஸ் கான்கிரீட் ஆலை இயக்கி வருவதாக மனுதாரர் புகார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் எந்த பகுதியிலும் மாசு ஏற்படும் தொழிற்சாலை அமைக்க, குறிப்பாக ரெடிமிக்ஸ் கான்கிரீட் ஆலை அமைக்க, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறுவது அவசியம். ஆனால், சோழிங்கநல்லுாரில் வாரியத்திடம் எந்த அனுமதியும் பெறால் தனியார் நிறுவனம், ரெடிமிக்ஸ் ஆலையை செயல்படுத்தி வந்துள்ளது.

தீர்ப்பாயத்தின் உத்தரவைத் தொடர்ந்து வாரியம் நேரில் ஆய்வு மேற்கொண்டபோது, அங்கு எந்த பணியும் நடக்கவில்லை. அனுமதியின்றி கட்டுமான் பணிகள் நடப்பதை வாரியம் அனுமதிக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement