பட்டாசு விபத்தில் 29 பேர் உயிரிழப்பு; தலைமை செயலர், எஸ்.பி.,க்கு நோட்டீஸ்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில், சமீபத்தில் நடந்த இரு வேறு பட்டாசு ஆலை விபத்துக்களில், 29 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து, தமிழக அரசின் தலைமை செயலர், விருதுநகர் எஸ்.பி.,க்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், கட்டனார்பட்டி, வனஜா பட்டாசு ஆலையில் ஏப்., 19 மதியம் நடந்த பட்டாசு விபத்தில், 25 பேர் உயிரிழந்தனர். போலீசார், தீயணைப்பு வீரர்கள் உட்பட, 21 பேர் காயமடைந்தனர். பட்டாசு ஆலை உரிமையாளரான முன்னாள் பஞ்., தலைவர் ஈஸ்வரி தலைமறைவாக உள்ளார். அவரது கணவர் முத்து மாணிக்கம், விருதுநகர் உரிமையியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். ஆலை உள்குத்தகைதாரர் முத்து கிருஷ்ணன், கைது செய்யப்பட்டார்.

முன்னதாக ஏப்., 13ல் வெம்பக்கோட்டை, கே.சத்திரப்பட்டியில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில், நான்கு பேர் உயிரிழந்தனர். இவ்விரு விபத்துகள் குறித்து விசாரணையை துவங்கிய தேசிய மனித உரிமைகள் ஆணையம், இரு வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு தலைமை செயலருக்கும், விருதுநகர் எஸ்.பி., ஸ்ரீநாதாவிற்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதில், காயமடைந்தவர்களின் உடல்நிலை, வழக்கு விசாரணை, உயிரிழந்தோரின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு குறித்த விவரங்கள் இடம்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement