அண்ணாமலை எம்.பி.,யாக வாய்ப்பு: ஆந்திராவில் இருந்து தேர்வாவாரா?

11


- நமது நிருபர் -

தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, ஆந்திராவில் இருந்து ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அண்ணாமலை, தற்போதைய சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. தன் தந்தை உடல்நிலையை காரணம் காட்டி, தேர்தல் பணிகளிலும் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கி இருந்தார்.

இதையடுத்து, டில்லிக்கு அழைக்கப்பட்டார். அப்போது, அவருக்கு, பா.ஜ., மேலிடம் தரப்பில் சில உறுதிமொழி அளிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

பின் தமிழகம், கேரளா, புதுச்சேரி என தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டார்.

பிரசாரத்துக்காக, அண்ணாமலைக்கு தனி ஹெலிகாப்டர் வசதியும், கட்சி சார்பில் செய்து தரப்பட்டது. இந்நிலையில், ஆந்திராவில் இருந்து, ராஜ்யசபாவுக்கு அண்ணாமலை அனுப்பப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஆந்திராவில், வரும் ஜூன் 21ம் தேதியுடன், மூன்று ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.பி.,க்கள், ஒரு தெலுங்கு தேசம் எம்.பி., என நான்கு ராஜ்யசபா எம்.பி.,க்களின் பதவி காலம் நிறைவடைகிறது.

எனவே, புதிய எம்.பி.,க்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், மே மாதம் நடைபெற உள்ளது.

ஆந்திர சட்டசபையில் தற்போதைய கட்சிகளின் பலத்தின் அடிப்படையில், ஆளும் தெலுங்கு தேசம் கூட்டணி சார்பில் நான்கு எம்.பி.,க்களை ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கலாம்.

எனவே, காலியாகும் நான்கு எம்.பி.,க்களில் இரண்டு இடங்களை, தன் கட்சிக்கு வைத்துக் கொண்டு, கூட்டணி கட்சிகளான பா.ஜ., மற்றும் ஜனசேனா ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடத்தை ஒதுக்க, தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு முடிவு எடுத்துள்ளதாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.

அதன்படி, பா.ஜ.,வுக்கு ஒதுக்கப்படும் ஒரு இடத்தில், அண்ணா மலையை நிறுத்தி, ஆந்திராவில் இருந்து ராஜ்யசபாவுக்கு அவரை அனுப்ப கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவலை, ஆந்திர மாநில பா.ஜ., நிர்வாகிகள் சிலர் தெரிவிக்கின்றனர்.

ஜனசேனா கட்சி சார்பில், அக்கட்சி தலைவரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாணின் நெருங்கிய நண்பர் லிங்கமனேனி ரமேஷ், தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தெலுங்கு தேசம் கட்சி போட்டியிடும் இரண்டு இடங்களில் ஒன்றுக்கு, முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனும், ஆந்திர அமைச்சருமான நாரா லோகேஷின் நண்பர் சனா சதீஷ் நிறுத்தப்பட உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறின.

இன்னொரு இடத்துக்கு தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தோர் முட்டி மோதுவதாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் கூறின.

Advertisement