ஆய்வு செய்ய வேண்டியவர்கள் ஓய்வில் இருக்கலாமா: தமிழிசை

9

-நமது நிருபர் -

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23ல் சட்டசபைத் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடந்தது. இதைத்தொடர்ந்து, தமிழக முதல்வர் ஸ்டாலின், தன் குடும்பத்துடன் ஓய்வுக்காக கொடைக்கானல் சென்று விட்டார்.

துணை முதல்வர் உதயநிதி, தன் மனைவி மற்றும் மகளுடன் துபாய் சென்றுள்ளார். அங்கு சில நாட்கள் ஓய்வுக்குப் பின், அவர் தமிழகம் திரும்ப திட்டமிட்டுள்ளார்.

இதை மிகக் கடுமையாக விமர்சித்து, தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை, தன் 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: ஓட்டளிக்க கோடை வெயிலில் வரிசையில் நின்ற மக்கள் அனைவரும் தங்களுடைய வீட்டில் தங்கள் பணிகளை கவனித்துக் கொண்டுள்ளனர். ஆனால், எப்போ தும் பணியில் இரு க்க வேண்டிய முதல்வர், குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு ஓய்வெடுக்கச் சென்றுள்ளார்.

ஓட்டளித்து துணை நிற்கும் மக்கள் அனைவரும் தங்கள் அன்றாட பணியில் இருக்க, துணை முதல்வர் அயல் நாட்டு பயணத்தில் குடும்பத்தினருடன் உள்ளார். அரசியல் என்பது அனைவருக்கும் சமமே. தி.மு.க.,வின் இந்த ஏற்றத்தாழ்வு மனப்பான்மை, அவர்களின் ஏற்றத்திற்காக அல்ல; இறக்கத்திற்காகவே.

மொத்தத்தில் ஆய்வு செய்ய வேண்டியவர்கள் ஓய்வுக்கு சென்றுள்ளனர். இதே கூட்டம் தான், அன்று அரசு வேலையாக ஊட்டி சென்ற பெருந்தலைவர் காமராஜரைப் பார்த்து, 'கும்பி எரியுது; குடல் வேகுது; குளுகுளு ஊட்டி ஒரு கேடா?' என்று கேலி பேசினர். பொதுநலம் என்று பேசி திரியும் இந்த சுயநலவாதிகளை, அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement