அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து
காஜியாபாத்: டில்லி அருகே உத்தர பிரதேச மாநிலத்தின் காஜியாபாத் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள், இரண்டரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால், வீடுகளில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலாகின.
உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத் இந்திராபுரத்தில் அமைந்துள்ள, 'கவுர் கிரீன் அவென்யூ' அடுக்குமாடி குடியிருப்பின் 11வது தளத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று காலை 9:00 மணிக்கு தீப்பற்றியது.
அடுத்தடுத்த தளங்களில் உள்ள வீடுகளுக்கும் மளமளவென தீ பரவியது.
காஜியாபாத் மற்றும் நொய்டாவில் இருந்து, 17 வண்டிகளில் வந்த, 70 தீயணைப்பு வீரர்கள், இரண்டு 'ஹைட்ராலிக் கிரேன்'கள் உதவியுடன் இரண்டரை மணி நேரம் போராடி காலை, 11:30 மணிக்கு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஒரு வீட்டில் ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவியுடன் வசித்த முதியவரை, தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக வெளியேற்றி, அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பினர். வீடுகளில் இருந்த பொருட்கள் தீயில் கருகி சாம்பலாகின.
தீப்பற்றியதற்கான காரணம் குறித்து போலீஸ் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.