தாதா தாவூத் இப்ராஹிமின் கூட்டாளி இந்தியாவுக்கு நாடு கடத்தல்

11


புதுடில்லி: போதைப்பொருள் வழக்கில் தேடப்பட்டு வந்த தாதா தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளியான சலீம் டோலா,59, இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டான்.


சர்வதேச போதைப்பொருள் கடத்தலில் முக்கிய புள்ளியாக கருதப்படும் சலீம் டோலா மீது நம் நாட்டில், போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ், 10 வழக்குகள் உள்ளன. குறிப்பாக, மஹாராஷ்டிராவின் சாங்கிலி மாவட்டத்தில் கண்டறியப்பட்ட 252 கோடி ரூபாய் மதிப்பிலான எம்.டி., எனப்படும் மெபெட்ரான் போதைப் பொருள் பிடிபட்ட வழக்கின் முக்கிய குற்றவாளி இவன் தான். பாகிஸ்தானில் பதுங்கி உள்ள பயங்கரவாதி தாவூத் இப்ராஹிம் உடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளான்.

நம் மத்திய புலானாய்வு அமைப்பின் கோரிக்கையின் பேரில், இன்டர்போல் எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பு, 'ரெட் கார்னர்' நோட்டீஸ் விடுத்திருந்தது. சில தினங்களுக்கு முன், துருக்கி தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில் சலீம் டோலா பிடிபட்டான்.



ஐக்கிய அரபு எமிரேட்சின் உதவியுடன் அவரை இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சிகளை மத்திய புலனாய்வு அமைப்புகள் மேற்கொண்டன. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இது தொடர்பாக எமிரேட்ஸ் அரசுடன் பேச்சு நடத்தியிருந்தார். இதன் பயனாக, தற்போது சலீம் டோலா,59, இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டான்.


இன்று காலை ஒரு சிறப்பு விமானத்தில் டில்லிக்கு அழைத்து வரப்பட்ட அவன், தற்போது உளவுத்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் இருக்கிறான். விசாரணைக்காக அவன் மும்பை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறான்.


கடந்தாண்டு சலீம் டோலாவின் மகன் தாஹிர் டோலா மற்றும் அவரது உதவியாளர் சலீம் முகமது சோஹைல் ஷேக் ஆகியோர் துபாயில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement