ஒரு சொத்துக்கு ‘இரட்டை ஆவணம்’ தயாரித்து ரூ.3 கோடி நிலமோசடி: சகோதரர்கள் 4 பேர் கைது 

ஆவடி: சோழவரத்தில் ஒரே சொத்துக்கு இரு கிரயப் பத்திரங்கள் என இரட்டை ஆவணம் தயாரித்து, 3 கோடி ரூபாய் நிலமோசடியில் ஈடுபட்ட சகோதரர்கள் நான்கு பேர் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

செங்குன்றம் அடுத்த சோழவரத்தில் ஆண்டாளம்மாள் என்பவருக்கு, 58 சென்ட் நிலம் இருந்தது. கடந்த 1991ல் அந்த நிலம் பெரியண்ணன் என்பவருக்கு விற்றுள்ளார். 2007ல் பெரியண்ணன் அதை பாபு என்பவருக்கு விற்றுள்ளார். பாபு அதை சுரேஷ் குமார், 45, என்பவருக்கு விற்றுள்ளார்.

இந்நிலையில், கடந்த 2006ல், ஆண்டாளம்மாளின் வாரிசுகளான லோகநாதன், புண்ணியகோட்டி, ஞானசேகரன், பாபு உள்ளிட்ட 10 குடும்ப உறுப்பினர்கள், ஏற்கனவே சுரேஷ்குமாருக்கு விற்பனை செய்யப்பட்ட நிலத்தை, மீண்டும் ‘டபுள் டாக்குமென்ட்’ எனும் இரட்டை ஆவணம் தயாரித்து, முறைகேடில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த நிலத்தை லோகவதி என்பவருக்கு பொது அதிகாரம் கொடுத்துள்ளனர். அந்த பொது அதிகாரம் வாயிலாக ராஜன் என்பவருக்கு, நிலத்தை விற்பனை செய்துள்ளார்.

கடந்த 2024ல், சுரேஷ்குமார், நிலத்தின் மீது வில்லங்க சான்று சரிபார்த்தபோது, மேற்படி மோசடி தகவல்கள் தெரியவந்தன. இதையடுத்து, ஆவடி மத்திய குற்றப்பிரிவில் கடந்தாண்டு சுரேஷ்குமார் புகார் அளித்தார்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் வள்ளி தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரித்தனர். முறைகேடு சம்பவம் உறுதியானதை அடுத்து, ஆண்டாளம்மாளின் வாரிசுகளான மாதவரத்தைச் சேர்ந்த லோகநாதன், 58, சோழவரத்தைச் சேர்ந்த புண்ணியகோட்டி, 56, ஞானசேகரன், 52, மாதவரத்தைச் சேர்ந்த பாபு, 47 மற்றும் செங்குன்றத்தைச் சேர்ந்த ராஜன், 68, ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

Advertisement