பாய்ந்த பணம்; புரளுமா ரிசல்ட்?

''என்ன மித்து... ஓட்டுப்பதிவெல்லாம் முடிஞ்சு ஊரே ஓய்ஞ்சிருச்சு போல...'' என்று கேட்டபடியே ஸ்கூட்டரை நிறுத்தினாள் சித்ரா.

''ஆமாக்கா... 'பணம் பாதாளம் வரை பாயும்'னு சும்மாவா சொன்னாங்க... இது பொதுத்தேர்தலா இல்ல... இடைத்தேர் தலான்னு சந்தேகம் வர்ற அளவுக்கு வாரி இறைச்சிட்டாங்கக்கா!''

''ஆமா மித்து... தி.மு.க. - அ.தி.மு.க.காரங்க ரெண்டு பேருமே போட்டி போட்டுக்கிட்டு ஓட்டுக்கு 1,000, 2,000 -ன்னு வாக்காளர்களைக் குஷிப்படுத்திட்டாங்க. மாவட்டத்தோட மெகா தொகுதில ஆளும்கட்சி வேட்பாளரு தரப்புல அரிசி டிரம் 'ரகசிய' டோக்கன் கொடுத்தாங்களாம் தெரியுமா?''

''தெரியும்க்கா... அரிசி டிரம் சீக்கிரமே வீட்டுக்கு வரும்னு சொல்லியிருக்காங்களாம். அப்புறம்... வேட்பாளர் தரப்பு யாரையும் நம்பல; சொந்தக்காரங்களை வச்சு தான் பணத்தை வினியோகிச்சிருக்காங்க... அப்படியும் சில ஏரியாவுல பொறுப்பாளர்கள் கைவரிசையைக் காட்டி, 'பத்து லகரம்' வரைக்கும் ஆட்டையப் போட்டதா பேசிக்கிறாங்க.''

ஆபீசுக்கே வந்து காசு ''அப்புறம் மித்து... அந்த 'சத்தியமான' காலனில வசிச்சவங்க 300 பேர் வந்து ஓட்டுக்குப் பணம் கேட்டாங்களாமே?''

''அக்கா, அவங்க வீரபாண்டிக்குக் குடிபோயிட்டாலும் ஓட்டு இங்கேயே இருந்திருக்கு. அவங்களைக் கவனிக்காம விட்டதால, 300 பேர் ஒட்டுமொத்தமா வண்டியப் பிடிச்சு, ஆளும் கட்சி ஆபீசுக்கே போயிட்டாங்க. வேட்பாளர் ஓடி வந்து சமாதானம் செஞ்சு, 'கவனிச்சு' அனுப்புனாராம். 'தெற்கு' நிர்வாகிகளுக்கு அப்புறம்தான் முகத்துல பிரகாசமே வந்துச்சாம்''

''மித்து... தேர்தல் ஆபீஸர் சில பேர் பண்ணின 'கிராக்கி'யைப் பார்த்தியா? சின்னசாமியம்மாள் ஸ்கூலுக்குப் போன நிருபர்களை ஒரு லேடி ஆபீஸர் உள்ள விடவே மாட்டேன்னு மைக்கைப் பிடிச்சு சத்தம் போட்டிருக்காங்க. கலெக்டர் கொடுத்த கார்டையே மதிக்காம, 'எனக்கு போன் பண்ணச் சொல்லுங்க'ன்னு அதிகாரம் பண்ணியிருக்காங்க''

''அதே மாதிரிதான் அக்கா, போலீசுக்கும் சரியான கைடன்ஸ் இல்ல. திருப்பூர் தெற்குல ரோட்டரி ஸ்கூலுக்குப் போற மெயின் ரோட்டையே அடைச்சு வச்சு பப்ளிக் கிட்ட திட்டு வாங்குனாங்க. மங்கலத்துல 'பூத் சிலிப்' கொடுக்க வந்த டீச்சரை 100 மீட்டருக்கு அப்பால போன்னு போலீஸ் துரத்தியிருக்கு. எது சரி, எது தப்புன்னே தெரியாம ஒரே கன்பியூஷன்!''

வேட்பாளருக்கே 'கவனிப்பு' ''ஆமா மித்து... இதுல இந்த 'விசில்' பயம் ஆளுங்கட்சியை ரொம்பவே ஆட்டுது போல. சிட்டி லிமிட் வர்ற ஒரு தொகுதிலயும், கோழிப்பண்ணை தொகுதிலயும் 'விசில்' சத்தம் அதிகமா கேட்டா சிக்கலாயிடும்னு மேலிடத்துல இருந்து சிக்னல் வந்துச்சாம். அதனால ஒரு 'பத்து லகரம்' கொடுத்து, 'மெதுவா பிரசாரம் பண்ணுங்க'ன்னு பேசி முடிச்சிருக்காங்க. ஆனா இளைஞர்கள் மத்தில சின்னம் ரொம்ப ஸ்ட்ராங்கா வேலை செஞ்சிருக்குன்னு புலம்புறாங்க.''

''மித்து... இன்னொன்னு கவனிச்சியா... டீச்சர்ஸூம், ஸ்டாப்களும் பாவம்... ஓட்டுச்சாவடில தங்குன இடத்துல அவங்களுக்குச் சரியா சாப்பாடு, டீ கூட கிடைக்கலையாம். சில ஊர்ல காசு கொடுத்தா கூட சாப்பாடு வாங்க வழியில்லாம தவிச்சிருக்காங்க. கடைசியில ஏஜென்ட்கள் தான் சாப்பாடு வாங்கிக் கொடுத்திருக்காங்க.''

கரூர் கேங் பணம் சப்ளை ''அக்கா... கரூர் கேங் 'நாசி' தொகுதியில ஓட்டுக்கு 2,500 ரூபாய் கொடுத்திருக்காங்க. ஆனா ஒரு லோக்கல் முக்கியப் புள்ளி, மொத்தப் பணத்தையும் வாங்கிட்டு ரிலீஸ் பண்ணாம போக்குக் காட்டியிருக்காரு. கரூர் கேங் போன் பண்ணா சுவிட்ச் ஆப் பண்ணிட்டு அலைக்கழிச்சிருக்காரு. கடைசியில மேலிடத்துக்குப் புகார் போகப் போகுதுன்னு தெரிஞ்சுதான் கொஞ்சம் பணத்தை ரிலீஸ் பண்ணிருக்காரு.''

''மித்து... 'காளை' தொகுதி மேட்டர் இன்னும் 'ஹாட்'... அங்க இருக்கிற பழசான கோட்டை ஓட்டுச்சாவடிக்கு தி.மு.க. வேட்பாளரான மினிஸ்டர் விசிட் வந்தப்போ, அ.தி.மு.க. காரங்க ஓட்டு கேட்குறாங்கன்னு புகார் வந்திருக்கு. போலீஸ் கண்டுக்காததால, கடுப்பான மினிஸ்டர் கார்ல இருந்து இறங்கி வந்து 'நாமளும் ஓட்டு கேட்போம்'னு நின்னுட்டாரு. இதனால ரெண்டு கட்சிக்கும் இடையில பெரிய லடாயே நடந்திருக்கு''

''எப்படி இருக்குது 'தாரா' தொகுதி நிலவரம்?''

''மித்து... அங்க மினிஸ்டருக்கு சீட்டு கிடைக்கல... பெண் டாக்டர் தி.மு.க. வேட்பாளரா இருக்காங்க. ஆனா 'விசில்' கட்சி ஏகப்பட்ட ஓட்டு பிரிக்கும்னு சொல்றாங்க. அ.தி.மு.க. வேட்பாளரும், 'விசில்' கட்சிக்காரரும் ஒரே சமூகமாம். இதனால அ.தி.மு.க. தரப்பு கொஞ்சம் கலக்கத்துல இருக்கு. ஆனாலும், ஓட்டு எண்ணும்போதுதான் உண்மை தெரியும்...

அலட்சியத்தால் கொலை ''இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், இந்த எலக் ஷன் பிஸில ஒரு மர்டர் மேட்டரையே போலீஸ் கண்டுக்காம விட்டிருக்காங்க. அருள்புரத்தைச் சேர்ந்த ஒருத்தர் காணாம போன கம்ப்ளைன்ட்டை நார்த் போலீஸ் ஒழுங்கா விசாரிக்கலையாம். கடைசியில அவர் மர்டர் ஆனது தெரிஞ்சிருக்கு. போலீஸ் அஜாக்கிரதைதான் காரணம்னு ஜனங்க பேசிக்கிறாங்க.''

''அக்கா... மங்கலம் பக்கம் நடந்ததை கேளுங்க... அங்க கோவிலுக்குப் பின்னாடி ஒரு கும்பல் சரக்கு அடிச்சுட்டு இருந்திருக்காங்க. போலீஸ் போய் மிரட்டி, பாட்டிலை எல்லாம் உடைச்சிருக்காங்க. ஆனா அங்க இருக்கிற சில காலனிகள்ல ஆளும்கட்சி தரப்புல இருந்து மதுபாட்டில்களும், சிக்கன்-மட்டன் விருந்தும் அமர்க்களமா நடந்திருக்கு. அங்க ஓசியில வாங்கிட்டு வந்து பொது இடத்துல குடிச்சவங்கதான் போலீஸ்கிட்ட மாட்டிக்கிட்டாங்க!''

''அடப்பாவமே... அப்புறம் இந்த 'நீட்' கோச்சிங் சென்டர்ல என்னவாம் மித்து!''

''அக்கா... எலக் ஷன் அறிவிப்பு வந்ததாலயோ என்னவோ, இந்தத் தடவை நீட் பயிற்சிக்கு மாணவர் வர்றது குறைஞ்சிடுச்சாம். ஒரு மாணவர் வந்தா கூட பாடம் நடத்த வேண்டிய கட்டாயத்துல ஆசிரியர்கள் புலம்பிட்டு இருக்காங்க''

வீடு தேடி வருது 'சரக்கு' ''மித்து... சேவூர் பக்கத்துல 'மங்கரசு' ஊர்ல, மது விற்பனை சில்லிங்குல அமர்க்களமா களை கட்டுதாம். கேட்ட சரக்கை கேட்ட நேரத்துக்கு வீடு தேடியே கொண்டு வந்து கொடுக்கிறாங்களாம். இதெல்லாம் தெரிஞ்சும் யாருமே மேலதிகாரிங்களுக்குத் தகவல் சொல்றதே இல்லையாம். மாசாமாசம் ஒரு 'லம்பான' பெரிய தொகை ஸ்டேஷனுக்கு கைமாறிடுதாம். அந்த நன்றிக் கடனுக்காகத்தான் போலீசார் சில்லிங் பார்ட்டிகளுக்கு ரொம்ப விசுவாசமா இருக்காங்களாம். பொதுமக்கள் அஞ்சு தடவைக்கு மேல புகார் கொடுத்தும் ஒரு ஆக்ஷன் கூட இல்லையாம்''

''அக்கா... அவிநாசி மகளிர் ஸ்டேஷன்ல போக்சோ கேஸ்ல பெற்றோர் புகார் கொடுக்கப் போனால் கூட அலைக்கழிக்கிறாங்களாம். கேஸ் போடாம 'கட்டப்பஞ்சாயத்து' பண்ணி அப்படியே சமரசம் செஞ்சு முடிக்கத்தான் பார்க்கிறாங்களாம். போன மாசம் கூட கவர்மென்ட் வேலைல இருக்கிற ஒருத்தர், மாற்றுத்திறனாளிப் பொண்ணுகிட்ட பாலியல் அத்துமீறல்ல ஈடுபட்டிருக்காரு. அதுக்குப் புகார் கொடுத்தும் நாலஞ்சு நாள் கழிச்சுதான் கேஸே போட்டிருக்காங்க.''

''சே... கொடுமை மித்து!''

''இன்னொரு விஷயம் கேளுங்கக்கா... சேவூர் பக்கத்துல 8 வயது சிறுமிகிட்ட ஒரு பெரியவர் அத்துமீறியிருக்கார். அதுக்குப் புகார் கொடுத்தா, 'அப்படியெல்லாம் பெருசா ஒன்னும் நடக்கல... அந்தப் பெரியவர் தொட்டுத்தான் பேசினாரு'னு போலீஸ்காரங்களே வக்காலத்து வாங்குறாங்களாம்'' என ஆதங்கப்பட்டாள் மித்ரா.

''என்ன பண்றது மித்து... எல்லாம் காலக்கொடுமை! சரி அடுத்த வாரம் இந்நேரம் ரிசல்ட் வந்திருக்கும். பணத்தால் தேர்தல் முடிவுகள் புரளுமா... 'கணிப்பு' புலிகள் சொல்றது நிஜமா இருக்கான்னு பார்ப்போம்''

ஸ்கூட்டரைக் கிளப்பினாள் சித்ரா.

Advertisement