ஈரான் போர் எதிரொலி; ஓபெக் அமைப்பில் இருந்து வெளியேறும் ஐக்கிய அரபு அமீரகம்

4

அபுதாபி: பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அமைப்பில் இருந்து வெளியேறுவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.

பிப்.28ம் தேதி ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து தாக்குதலை தொடங்கின. பதிலுக்கு ஈரானும் தாக்குதலை தொடங்க போர் பல நாட்கள் நீடித்தது. போருக்கு நடுவே, உலகளவில் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இது பல நாடுகளை கடுமையாக பாதிக்க, சில நாடுகளில் பெட்ரோலிய பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டது.

எண்ணெய் விலையை உயர்த்துவதன் மூலம் உலக நாடுகளை ஓபெக் (OPEC- பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அமைப்பு) சுரண்டுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி இருந்தார். இந்நிலையில் மே 1ம் தேதியில் இருந்து ஓபெக் அமைப்பில் இருந்து விலகுவதாக ஐக்கிய அரபு அமீரகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. தேச நலன்களை முன்னிறுத்தி இந்த முடிவை எடுத்துள்ளதாக, அமீரகம் தெரிவித்துள்ளது.

1960ம் ஆண்டு செப்.14ம் தேதி பாக்தாத்தில் தொடங்கப்பட்ட ஓபெக் அமைப்பில் 1967ம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு அமீரகம் இணைந்து முக்கிய பங்கினை ஆற்றி வருவது, குறிப்பிடத்தக்கது.

Advertisement