லஷ்கர் - இ - தொய்பாவுக்கு அடுத்த அடி: முக்கிய பயங்கரவாதி சுட்டுக்கொலை

10


இஸ்லாமாபாத்: மும்பை பயங்கரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீதின் மிக நெருங்கிய கூட்டாளியும், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர்களில் ஒருவருமான ஷேக் யூசுப் அப்ரிடி, பாகிஸ்தானில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டான்.


நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து, நம் நாட்டிற்கு எதிராக பயங்கரவாதத்தை துாண்டி வரும் அமைப்புகளில் லஷ்கர் - இ - தொய்பா முக்கியமானது. 2008ல் மும்பையில் கடல் வழியாக நுழைந்து, லஷ்கர் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 166 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது ஹபீஸ் சயீத் என்ற பயங்கரவாதி. அவரது நம்பிக்கைக்குரிய தளபதியான ஷேக் யூசுப் அப்ரிடி பாகிஸ்தானில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான்.


கடந்த 26ல், கைபர் பக்துங்க்வா மாகாணத்தின் லான்டி கோட்டல் பகுதியில் அவர் சென்ற போது, மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் அவர் உயிரிழந்தான்.கைபர் பக்துங்க்வாவில் பயங்கரவாத அமைப்பிற்கு இளைஞர்களை சேர்ப்பது மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளில் அப்ரிடி செயல்பட்டவன்.


இந்திய எதிர்ப்பு பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் மர்மமான முறையில் கொல்லப்படுவது இது முதன்முறையல்ல. கடந்த வாரம் லாகூரில், லஷ்கர் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான அமீர் ஹம்சா மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement