மானாமதுரையில் சித்திரை தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

மானாமதுரை, ஏப்.30-



சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்துக்கு உட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் 21ம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா துவங்கியது தினமும் அம்மனும்,சுவாமியும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.கடந்த 28ம் தேதி திருக்கல்யாணம் நடைபெற்றது.நேற்று பிரியாவிடையுடன் சோமநாதர் சுவாமி புதிய தேரிலும், பழைய தேரில் ஆனந்தவல்லி அம்மனும் தனித்தனியாக எழுந்தருள நேற்று தேரோட்டம் நடைபெற்றது.

காலை 9:40 மணிக்கு மேல் சுவாமி தேர் முதலில் கிளம்பியது. இதன் பின்னர் பழைய தேரில் ஆனந்தவல்லி அம்மன் எழுந்தருள அத்தேர் இழுக்க தாமதமானது. சோமநாதர் சுவாமி சென்ற புதிய தேர் தெற்கு ரத வீதி கடைசி வரை வந்து விட்டது. பின்னால் ஆனந்தவல்லி அம்மன் தேர் வராததை தொடர்ந்து சோமநாதர் சுவாமி தேரை இழுத்த பக்தர்கள் ஆனந்தவல்லி அம்மன் தேரையும் இழுத்து வந்தனர். இதேபோன்று தேர் நிலையை அடையும் வரை மாறி,மாறி பக்தர்கள் தேர்களை இழுத்து வந்தனர். ஒன்றன்பின் ஒன்றாக தேர் வராமல் மிகவும் தாமதமாக சுற்றி வந்து தேர் நிலையை அடைந்தது.

பக்தர்கள் கூறியதாவது:

மானாமதுரையில் 70 வருடங்களுக்குப் பிறகு 2 பெரிய தேர்களில் தேரோட்டம் நடைபெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த வருடங்களில் நடைபெற்ற தேரோட்டத்தின் போது தேரோட்டம் ஆரம்பித்து ஒரு மணி நேரத்துக்குள் தேர் நிலைக்கு வந்துவிடும். ஆனால் இந்த வருடம் 4 மணி நேரம் தாமதமாக நிலையை அடைந்துள்ளது என்றனர்.

Advertisement