மும்பையில் ரூ.1,745 கோடி போதைப்பொருள் பறிமுதல்; அதிகாரிகளுக்கு அமித் ஷா பாராட்டு

24

மும்பை: மும்பையில் ரூ.1,745 கோடி மதிப்புடைய கோகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மும்பையில் ரூ.1745 கோடி மதிப்புள்ள 349 கிலோ கோகைன் என்ற உயர்தரப் போதைப் பொருளை, போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர். இதன்மூலம், மிகப்பெரிய அளவிலான போதைப்பொருளை இந்தியாவுக்குள் கொண்டு வர இருந்த சர்வதேச கும்பலின் சதித்திட்டத்தை அதிகாரிகள் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.

இந்த நிலையில், போதைப்பொருளை பறிமுதல் செய்யும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில்; போதைப்பொருள் கும்பலை ஒழிக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். சிறிய அளவிலான போதைப்பொருள் கடத்தலைத் தொடர்ந்து கண்காணித்து, அதன் மூலம் ஒரு மிகப்பெரிய நெட்வொர்க் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மகத்தான செயலில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு என்னுடைய பாராட்டுக்கள், எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த ஏப்ரல் 29ம் தேதி ஒடிசாவின் மல்காங்கிரியிலிருந்து கோவைக்கு கடத்திச் செல்லப்படவிருந்த 200 கிலோ கஞ்சாவை என்சிபி அதிகாரிகள் பறிமுதல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement