17 ஆண்டுக்கு பின் பழிக்குப்பழி வெட்டி கொல்லப்பட்டார் முதியவர்

தென்காசி: தென்காசி அருகே, தந்தையை கொன்றவரை, 17 ஆண்டுகள் காத்திருந்து, அரசு பள்ளி ஊழியர், பழிக்குப்பழியாக கொலை செய்தார்.

தென்காசி மாவட்டம், புளியரையை அடுத்த, தெற்கு மேடு பகுதியை சேர்ந்தவர் காளி, 70. இவர், சப்பாணி மாடசுவாமி கோவில் கொடை விழாவில் நேற்று முன்தினம் இரவு பங்கேற்றார்.

அப்போது, தெற்கு மேடு, வடக்கு தெருவை சேர்ந்த அருண்குமார், 37, என்பவருக்கும், காளிக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த அருண்குமார், அரிவாளால் காளியை சரமாரியாக வெட்டிக்கொலை செய்து தப்பினார். புளியரை போலீசார் விசாரித்தனர்.

கொலையில் ஈடுபட்ட அருண்குமாரின் தந்தை முருகையா, அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். கடந்த, 2009ல் காளிக்கும், முருகையாவுக்கும் முன்விரோதம் இருந்தது. இதனால், முருகையாவை அரிவாளால் காளி, வெட்டிக்கொலை செய்தார்.

இந்த வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து, பின் வெளியே வந்த காளி, அதே பகுதியில் வசித்தார்.

முருகையா இறந்த பின், அவரது மகன் அருண்குமார், செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் ஊழியராக சேர்ந்தார். தந்தையை கொன்ற காளி மீது, அருண்குமார் வன்மத்தில் இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், கோவில் கொடை விழாவில் ஏற்பட்ட தகராறு மற்றும் தந்தை கொலைக்கு பழி தீர்க்கும் நோக்கில், 17 ஆண்டுக்குப்பின், காளியை அருண்குமார் வெட்டிக்கொலை செய்துள்ளார்.

தனிப்படை போலீசார், அருண்குமாரை தேடுகின்றனர்.

Advertisement