மேற்காசிய போர் பதற்றத்தால் விலைவாசி அதிகரிக்க கூடும்: மத்திய நிதியமைச்சகத்தின் அறிக்கை

2

புதுடில்லி: மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்கள், இந்தியாவில் பணவீக்க உயர்வு, வர்த்தகத்தில் பாதிப்பு போன்றவற்றை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக மத்திய நிதி அமைச்சகத்தின் மாதாந்திர பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தியாவின் வலுவான உள்நாட்டு தேவை மற்றும் பொருளாதார கட்டமைப்பு, இந்த பாதிப்புகளை எதிர்கொள்ள உதவும் என கூறப்பட்டுள்ளது.

அதில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

 போர் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் உரங்களின் வினியோகத்தில் தடை, உற்பத்தி செலவை அதிகரித்து, பணவீக்கத்தை உயர்த்தக்கூடும்

 'எல் நினோ'வின் தாக்கம் காரணமாக இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட குறைவாகவே இருக்கும் என கணிப்பு. இது, விவசாய உற்பத்தி மற்றும் உணவு பொருட்களின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்

 உலகளாவிய நிச்சயமற்ற சூழலால் ரூபாய் மதிப்பு பலவீனமடைவது, இறக்குமதி செலவை அதிகரித்து பணவீக்கத்திற்கு மேலும் அழுத்தம் தருகிறது

 உர உற்பத்திக்கான எரிவாயு ஒதுக்கீடு அதிகரிப்பு மற்றும் காரீப் பருவத்திற்கான உர மானியம் 12 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது

 வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களின் மூலதனம் மற்றும் சொத்து மதிப்பு வலுவாக இருப்பதால், நிதித்துறையில் பெரிய பாதிப்புகள் இருக்காது

 சமீபத்தில் கையெழுத்தான தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் போன்றவை ஏற்றுமதியை ஊக்குவிக்க உதவும்

 அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 - 7.4 சதவீதமாக இருக்க வாய்ப்பு.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement