மாணவர்களின் வாழ்க்கையை யோகா மேம்படுத்தும் கவர்னர் கைலாஷ்நாதன் பேச்சு

புதுச்சேரி: யோகா பயிற்சி மாணவர்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் என, கவர்னர் கைலாஷ்நாதன் பேசினார்.

சிவராம்ஜி யோகா மையம் மற்றும் சமர்ப்பணம் சேவை மையம் சார்பில் மூலக்குளம், அமிர்த வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் துவங்கிய யோகா பண்பு பயிற்சி முகாம் அவர், பேசியதாவது;

யோகா கலை, பழங்காலத்தில் பாரதத்தில் தான் தோன்றியது என்றாலும் இன்று அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜெர்மனி, ஜப்பான், அரபுநாடுகள் என உலகம் முழுதும் 150க்கும் மேலான நாடுகளில் பயிற்சி செய்யப்படுகிறது.

யோகா நம்முடைய உடலையும், மனதையும் ஒரே நேரத்தில் ஆரோக்கியமாக வைக்கும். இன்றைய பரபரப்பான உலகத்தில் நாம் சரியாக ஓய்வு எடுக்க முடிவதில்லை. சரியாக துாங்க முடிவதில்லை. முறையான சாப்பாடு இல்லாமல் ஓடிக் கொண்டே இருக்கிறோம். அதனால் நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பலவிதமான வாழ்க்கை முறை நோய்கள் ஏற்படுகிறது. மாணவர்கள் பல சவால்களை சந்திக்கிறார்கள். கல்வி, அழுத்தம், போட்டி மனப்பான்மை, மொபைல், லேப்டாப் போன்ற தொழில்நுட்ப சாதனங்களை அதிகமாக பயன்படுத்துவது போன்றவை மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

மாணவர்கள் தினமும் சில நிமிடங்கள் யோகா பயிற்சி செய்ய வேண்டும். அது அவர்களை ஆரோக்கியமாகவும், நினைவு ஆற்றலை அதிகரிக்கும். வாழ்க்கையில் இந்த இளமைப் பருவம் மிகவும் முக்கிமானது. நீங்கள் வளர்த்துக் கொள்ளும் பழக்கங்கள் உங்களுடையை எதிர்காலத்தை நிர்ணயிக்கும். அதனால் யோகா பயிற்சி போன்ற நல்ல பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

தினமும் காலையில் சீக்கிரம் எழுந்து யோகா பயிற்சி செய்யுங்கள். அது நமக்கு தேவையான ஆக்ஸிஜனை தருகிறது. உங்கள் உடல் ஆரோக்கியமாக இருந்தால் மனம் ஆரோக்கியமாக இருக்கும். அதை யோகா நமக்கு சொல்லித் தருகிறது.

இன்றைய மாணவர்கள் ஆரோக்கியமாக இருந்தால் ஆரோக்கியமான பாரதம் உருவாக முடியும். இந்த முகாமில் நீங்கள் கற்றுக் கொள்ளும் ஒவ்வொரு ஆசனமும், யோகா பயிற்சியும் உங்களுடைய வாழ்க்கையை மேம்படுத்தும். தினமும் குறைந்தது 20 நிமிடம் யோகா செய்யுங்கள். அதை உங்களுடைய வாழ்க்கையில் பழக்கமாக வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்களுடைய வாழ்க்கையை மாற்றும் சக்தியாக இருக்கும்' என்றார்.

Advertisement