த.வெ.க., தொழிற்சங்கம் துவக்க போக்குவரத்து ஊழியர் ஆர்வம்

16

சென்னை: தமிழகத்தில் போக்குவரத்து துறையின் கீழ் செயல்படும் எட்டு அரசு போக்குவரத்து கழகங்களில், 1.16 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர்.

அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், போக்குவரத்து துறையில் சங்கங்கள் உள்ளன. தி.மு.க.,வின் தொ.மு.ச., பேரவை, அ.தி.மு.க.,வின் அண்ணா தொழிற்சங்க பேரவை, மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் சி.ஐ.டி.யு., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.ஐ.டி.யு.சி., உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் செயல்படுகின்றன.

இதுதவிர, அரசியல் சார்பற்ற சில சங்கங்களும் செயல்பட்டு வருகின்றன. த.வெ.க., தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன. இருப்பினும், போக்குவரத்து துறையில் அக்கட்சிக்கு தொழிற்சங்கம் இல்லை. தற்போது, தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, அக்கட்சி ஆட்சி அமைக்க உள்ளது.

எனவே, போக்கு வரத்து துறையில் த.வெ.க., சார்பில் தொழிற்சங்கம் தொடங்க, அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

போக்குவரத்து ஊழியர்கள் சிலர் கூறியதாவது: தமிழகத்தில், தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வரும் போதெல்லாம், அக்கட்சிகளின் தொழிற்சங்கங்கள் பலமாக இருக்கும். அவர்களின் ஆதிக்கமும் அதிகமாக இருக்கும். ஆனால், அந்த நிலை தற்போது மாறிவிட்டது.

புதிதாக த.வெ.க., ஆட்சி அமையும் நிலையில், அதன் சார்பில் தொழிற்சங்கம் ஏற்படுத்த ஊழியர்கள் மத்தியில் போட்டி உருவாகியுள்ளது. பிற தொழிற்சங்கங்களில் இருப்போரும், த.வெ.க., சார்பாக பேனர், பதாகைகளை வைத்துள்ளனர். சில பணிமனைகளில், இரு வேறு குழுக்களாக பிரிந்து தொழிற்சங்கம் அமைக்கும் முயற்சி நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement