ஆதனுார் கிராமத்தில் ரோட்டில் ஓடும் கழிவு நீரால் மக்கள் அவதி

மானாமதுரை:மானாமதுரை அருகே ஆதனுார் கிராமத்தில் உள்ள தெருக்களில் கழிவு நீர் ரோட்டில் ஓடுவதாலும், குடிநீர் துர்நாற்றம் வீசுவதாலும் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கீழப்பசலை ஊராட்சிக்குட்பட்ட ஆதனுார் கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பெரும்பாலான தெருக்களில் கழிவுநீர் வடிகால் வசதி இல்லாத காரணத்தினால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மற்றும் மழை நீர் ரோட்டிலேயே தேங்கி விடுகிறது. மக்களுக்கு அருகில் உள்ள அரசனேந்தல் கிராமத்தில் இருந்து குழாய் மூலம் வரும் குடிநீர் துர்நாற்றம் வீசுவதால் அதனை பயன்படுத்த முடியாமல் மக்கள் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர்.

கிராம மக்கள் கூறியதாவது:

ஆதனுார் கிராமத்தில் கழிவுநீர் வாய்க்கால் வசதி இல்லாதது குறித்தும்,குடிநீர் போதிய அளவில் சப்ளை செய்யாதது குறித்தும் அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த சில மாதங்களாக குடிநீர் துர்நாற்றத்தோடு வருவதால் அதனை பயன்படுத்த முடியாத நிலையில் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி வருகிறோம். தற்போது மழை தொடர்ந்து பெய்து வருவதால் ரோடுகளில் கழிவு நீரோடு, மழை நீரும் தேங்குகிறது என்றனர்.

Advertisement