பேச்சு, பேட்டி, அறிக்கை

1

தமிழக காங்., முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை: தமிழகம் போன்ற விழிப்புணர்வு மிக்க மாநிலத்தில், மதச்சார்பின்மை என்ற மிக உயர்ந்த கருத்தை முதல்வர் விஜய், மிக உறுதியாக ஏற்றுக்கொண்டு ஒரு தேர்தலை சந்தித்தது மிகப்பெரிய விஷயம். தனக்கு தனி பெரும்பான்மை கிடைக்காத நேரத்தில் கூட, மதச்சார்பற்ற கட்சிகளின் உதவியை நாடினாரே தவிர, பா.ஜ., - அ.தி.மு.க., தயவை தேடவில்லை. அந்த மன உறுதி, கொள்கை பிடிப்பு பாராட்டுக்குரியது. பா.ஜ., தயவில் ஜெயித்த அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களின் ஒரு பகுதியினர் தந்த ஆதரவை விஜய்ஏத்துக்கிட்டது, இவரது பார்வைக்கு தப்பா படலையா?



அகில இந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் சசிகலா அறிக்கை: சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தோல்வி அடையக் கூடாது என்பதற்காகத்தான் அனைவரும் ஒன்றிணைவோம் என, வலியுறுத்தினேன்; ஒன்றுபடுவோம், வென்று காட்டுவோம் எனவும் கேட்டு கொண்டேன். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை இனியாவது ஏற்றுக்கொள்ளுங்கள்.

யார் எப்படி ஒன்றுபட்டாலும், இவங்களை மீண்டும் அ.தி.மு.க.,வில் சேர்ப்பது கேள்விக்குறிதான்!


டாக்டர் அம்பேத்கர் எஸ்.சி., - எஸ்.டி., பணியாளர் சங்கத்தின் மாநில நிர்வாகி மகிமைதாஸ் அறிக்கை: அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும். அவர்களின் நலன்களை உறுதிப்படுத்த, அரசு ஊழியர்கள் நல வாரியம் அமைக்க வேண்டும். பணியிட மாறுதல்கள் நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் நடப்பதற்கு சிறப்பு திட்டம் உருவாக்கினால், நாட்டின் 'நம்பர் ஒன்' முதல்வர் விஜய் தான் என்பது உறுதி.

அரசு ஊழியர்கள் மட்டுமே ஒட்டுமொத்த தமிழகம் என்பது போல கோரிக்கைகளை அடுக்குறாரே!



தமிழக பா.ஜ., விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் பேச்சு: மதுவால் கல்லீரல் உட்பட உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. மதுவால் கணவனை, மகனை இழந்த பெண்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது.
எனவே, முதல்வர் விஜய் மருத்துவக்குழு அமைத்து தமிழகம் முழுதும் மதுவால் ஏற்படும் தீமை குறித்து ஆய்வு செய்து, அதை வெள்ளை அறிக்கையாக வெளியிட்டு, ஒரு நல்ல தீர்வு காண வேண்டும்.

மதுவால் எந்த ஒரு நல்ல காரியமும் நடப்பது இல்லை... ஏன் இவ்வளவு நீட்டி முழக்கணும்... ஒரே கையெழுத்தில் எல்லா மதுபான கடைகளையும் அடைச்சுட்டா, ஒட்டுமொத்த தமிழகத்துக்கே விமோசனம் பிறந்துடும்!

Advertisement