வடமாநில தொழிலாளர்கள் இடையே மோதல்பாட்டில், கற்களால் தாக்கி கொண்டதால் அச்சம்

வெண்ணந்துார் :வெண்ணந்துார் அருகே, வடமாநில தொழிலாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில், பாட்டில், கற்களால் மாறி மாறி தாக்கி கொண்டதால், அப்பகுதி கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், வெண்ணந்துார் அருகே, ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் ஹெச்.எம்., டெக்ஸ்டைல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு, வடமாநில தொழிலாளர்கள், 500-க்கும் மேற்பட்டோர் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.


இதில், பீஹார் மாநிலத்தை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவரின் தங்கை சரஸ்வதியும், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராஜ்பரி என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இந்த விவகாரம், ரமேஷ்குமாருக்கு தெரியவந்ததை அடுத்து, கடந்த, 10 நாட்களுக்கு முன் ராஜ்பரியையும், சரஸ்வதியையும் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், மது போதையில் இருந்த ரமேஷ்குமார், ராஜ்பரியின் தாய் தனவதியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. அப்போது, இரு தரப்பை சேர்ந்த, 40-க்கும் மேற்பட்டோர் பாட்டில், கம்பு, கற்களால் மாறிமாறி தாக்கிக்கொண்டனர். இதில், 10-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.
ராசிபுரம் டி.எஸ்.பி., விஜயகுமார் தலைமையிலான போலீசார், மோதலை கட்டுப்படுத்தி, காயமடைந்தவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, வடமாநில தொழிலாளர்களால் அப்பகுதியில் அச்சம் நிலவுவதாக கூறி கிராம மக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து வெண்ணந்துார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement