படப்பையில் 2 மாணவர்கள் வெட்டிக்கொலை: பட்டப்பகலில் நடந்த கொடூரத்தால் பீதி

5

சென்னை: படப்பை அருகே நண்பர் வீட்டில் தங்கியிருந்த இரு மாணவர்களை, மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி கொன்றது. பட்டப்பகலில் நடந்த சம்பவம், பொதுமக்களிடையே பீதி யை கிளப்பியுள்ளது.

முடிச்சூர், வரதராஜபுரத்தைச் சேர்ந்தோர் பரத், 22; சீனு, 23. நண்பர்களான இருவரும், குரோம்பேட்டையில் உள்ள தனியார் கல்லுாரியில் டிப்ளமா இன்ஜினியரிங் படித்து வந்தனர்; துக்க நிகழ்ச்சிகளுக்கு கானா பாடல்களை பாடி வந்தனர்.

ஒரகடம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு துக்க நிகழ்ச்சி ஒன்றில் கானா பாடல் பாடிய பின், காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அடுத்த அம்மணம்பாக்கத்தில், நண்பர் லோகேஷ் என்பவரின் வீட்டில் தங்கினர்.

இந்நிலையில், இரண்டு இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்தும், முகத்தில் கர்சிப் கட்டிக்கொண்டும் வந்த ஆறு பேர் அடங்கிய ஒரு கும்பல், நேற்று காலை லோகேஷ் வீட்டிற்குள் புகுந்தது.

கத்திகளுடன் வந்ததை பார்த்து, வீட்டில் இருந்த லோகேஷ், அவரது தந்தை உள்ளிட்ட குடும்பத்தினர் பீதி அடைந்தனர். அந்த கும்பல், கத்திகளை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததோடு, அவர்களை வீட்டில் இருந்து விரட்டியது.

அதே நேரம், டிப்ளமா மாணவர்களான பரத் மற்றும் சீனுவை சுற்றி வளைத்தது. அங்கிருந்து தப்ப முயன்ற இருவரையும், அக்கும்பல் சரமாரியாக வெட்டி கொன்று அங்கிருந்து தப்பியது.

தகவலறிந்து வந்த படப்பை போலீசார், ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த பரத் மற்றும் சீனுவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

படப்பை போலீசார் வழக்கு பதிந்து, கொலையாளிகள் குறித்தும், கொலைக்கான காரணம் குறித்தும் விசாரித்து வருகின்றனர். இது, கஞ்சா கும்பலின் கைவரிசையாக இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து மாணவர்கள் இருவரை சரமாரியாக மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தது, படப்பை பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

மணிமங்கலம், படப்பை காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா புழக்கம் பரவலாக உள்ளது. இந்த காவல் நிலையங்கள், தாம்பரம் காவல் ஆணையரக கட்டுப்பாட்டில் இருந்தாலும், புறநகர் பகுதி என்பதால், பெ ரிய அளவில் ரோந்து பணி இருப்பதில்லை.

அதனால், கஞ்சா போதையில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதால், மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

Advertisement