இருந்த அடையாளமே இருக்காது; ஈரான் வரைபடத்தை குறிவைத்து எச்சரிக்கும் டிரம்ப்

10


வாஷிங்டன்: போர் நிறுத்தம் தொடர்பான விவகாரத்தில் காலம் தாழ்த்திக் கொண்டே சென்றால், ஈரான் இருந்த அடையாளமே இல்லாமல் செய்து விடுவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் கடந்த பிப்ரவரி மாதம் துவங்கியது. இருதரப்பும் பரஸ்பர தாக்குதல்களில் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஈரானின் உள்கட்டமைப்புகள் பலத்த சேதமடைந்துள்ளனர். இந்தப் போரினால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் பற்றாக்குறை நிலவி வருவதால், போர் நிறுத்தம் செய்ய உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், ஈரான் தன் கைவசம் உள்ள 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க வேண்டும், போர் இழப்பீடு கோரும் கோரிக்கையை ஈரான் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட அமெரிக்காவின் பல்வேறு நிபந்தனைகளால் இருதரப்பினரிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை முடங்கியுள்ளது.

இந்த நிலையில், போர் நிறுத்தம் தொடர்பான விவகாரத்தில் உடனடியாக முடிவு எடுக்காவிட்டால், இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் செய்து விடுவோம் என்று , ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக டிரம்ப்பின் 'ட்ரூத் சோஷியல்' என்ற எக்ஸ் தள கணக்குப் பக்கத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், "ஈரானைப் பொறுத்தவரை நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது. அவர்கள் விரைந்து செயல்படுவது மிகவும் நல்லது. இல்லையெனில், அவர்களைப் பற்றிய அடையாளமே மிஞ்சாது. நேரம் மிகவும் முக்கியமானது," என்று டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

அதுமட்டுமில்லாமல், ஈரானை சுற்றி வளைத்தது போன்று, உலக வரைபடத்தில் அந்நாட்டை அம்புக்குறியிட்டு இலக்காக நிர்ணயித்தது போன்ற போட்டோவையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், அரபு நாடுகள் தங்களின் ஆதரவு நாடுகள் என்பதைப் போல், அமெரிக்கக் கொடி வர்ணத்தில் அந்தப் போட்டோ வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement