விஜய் முதல்வரானதில் எனக்கு பொறாமை இல்லை: நடிகர் ரஜினி பேட்டி

28

சென்னை: ''புதிய அரசின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் உள்ளன. இரண்டு ஆண்டுகள் விஜயை வேலை செய்ய, பொதுமக்கள் விட வேண்டும்,'' என நடிகர் ரஜினி தெரிவித்தார்.

அவரது பேட்டி:

சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான போது, தி.மு.க., தலைவர் ஸ்டாலினை நான் சந்தித்து பேசியதால், நிறைய விமர்சனங்கள் வெளியாகின. அவர் என் 38 ஆண்டு கால நண்பர். எங்களது நட்பு, அரசியலுக்கு அப்பாற்பட்டது.

வருத்தம் தந்தது

ஜனநாயகத்தில் வெற்றி, தோல்வி சகஜம். இருப்பினும், சென்னை கொளத்துாரில் ஸ்டாலின் தோற்றது, எனக்கு வருத்தமாக இருந்தது.

அதனால், நண்பர் என்ற முறையில் அவரை நேரில் சென்று பார்த்தேன். விஜய் முதல்வராவதை தடுக்க ஸ்டாலினை பார்த்ததாகவும், இரண்டு பெரிய கட்சிகளை இணைக்கச் சென்றதாகவும் விமர்சனங்கள் வெளியாகின.

அந்த சூழலில், அதை பேசும் அளவிற்கு தரங்கெட்ட ஆள் ரஜினி இல்லை. இரண்டாவதாக, விஜய் வெற்றி பெற்றதற்கு நான் வாழ்த்து கூறவில்லை என்றனர். தேர்தலில் விஜய் வெற்றி பெற்றவுடன், 'எக்ஸ்' தளத்தில் நான் வாழ்த்து பதிவு வெளியிட்டுள்ளேன்.

கடந்த 2016ல் நான் அரசியலுக்கு வர முயற்சித்த போது, விமான நிலையத்திற்கு செல்லும் போதெல்லாம், செய்தியாளர்கள் இருக்கின்றனரா என்று கேட்பது வழக்கம். அப்படி தான், அண்மையில் பெங்களூரு செல்லும் போதும் கேட்டேன்; யாரும் இல்லை என்றனர்.

திடீரென ஒருவர் மொபைல் போனுடன் வந்து, 'விஜய் முதல்வராகி விட்டார்' என்றார். நான் பதிலளிக்காமல் சிரித்துக் கொண்டே சென்று விட்டேன்.

அதற்கு, 'வாழ்த்து சொல்லவில்லை; விஜய் மீது எனக்கு பொறாமை' என்றனர். நான் அரசியலில் இருந்து விலகி விட்டேன். அரசியலில் இல்லாத போது, நான் ஏன் விஜய் மீது பொறாமைப்பட வேண்டும்?

எனக்கும், விஜய்க்கும் ஒரு தலைமுறை இடைவெளி உள்ளது. விஜயை என்னுடன் ஒப்பிடுவதும், என்னை விஜயுடன் ஒப்பிடுவதும் நல்லதல்ல. சிறு வயதில் இருந்து அவரை பார்த்து வருகிறேன். அவர் மீது எனக்கு என்ன பொறாமை?

விஜய் தன் 52 வயதில் முதல்வராகி, எம்.ஜி.ஆர்., - என்.டி.ஆர்., சாதனைகளை விட அதிக சாதனை படைத்துள்ளார்.

மத்தியில் பா.ஜ., மற்றும் இங்குள்ள இரண்டு பெரிய கட்சிகளை எதிர்த்து, தனி ஆளாக வென்றுள்ளார்; அதுவும் சினிமா துறையிலிருந்து வந்து செய்து காட்டியுள்ளார். அதில், எனக்கு பொறாமை இல்லை; ஆச்சரியம் கலந்த சந்தோஷம்.

வெற்றி பெற்றிருப்பேன்

விஜய் மீது இளைஞர்கள் மத்தியில் நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன. அவற்றை அவர் செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நான் ஏன் அரசியலுக்கு வரவில்லை என, மூன்று பக்க அறிக்கையில் தெளிவாக சொல்லி விட்டேன்; அரசியலுக்கு வந்திருந்தால், 100 சதவீதம் வெற்றி பெற்றிருப்பேன்.

வீடியோ:
https://youtu.be/tV8XLSmAN0A


சினிமா வேறு, அரசியல் வேறு. என்னோட ரசிகர்கள் எந்த கட்சிக்கும் ஆதரவு கொடுக்கலாம் என ஏற்கனவே சொல்லி விட்டேன். 60 ஆண்டுகளாக ஆண்ட கட்சி களிடம் இருந்து, மாற்றம் வேண்டும் என மக்கள் எதிர்பார்த்த நிலையில், விஜய் வந்துள்ளார்.

புதிய அரசின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. அதை நிச்சயம் விஜய் பூர்த்தி செய்வார் என நம்புகிறேன். இரண்டு ஆண்டுகள் விஜயை வேலை செய்ய, மக்கள் விட வேண்டும்; அவருக்கு அவகாசம் தர வேண்டும்.

அவருடைய தொண்டர்கள், ரசிகர்கள் ஜாக்கிரதையாக நடந்து கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் தவறு, நேரடியாக விஜயை தான் பாதிக்கும்.

இவ்வாறு ரஜினி கூறினார்.

Advertisement