இளையராஜா பாடல்களை வாசிப்பது எளிது: ‛வீணை வாதினி' மைதிலி

வீணை இசைப்பதும், ஓவியம் வரைவதும் எனது இரு கண்கள் என விரல்களால் வித்தை செய்து, இரு வேறு கலைகளிலும் வித்தியாசம் நிகழ்த்துகிறார் புதுக்கோட்டையை சேர்ந்த மைதிலி சுபகணேஷ்.

வீணை இசை, ஓவியக்கலை அனுபவங்கள் குறித்து சண்டே ஸ்பெஷலுக்காக மனம் திறக்கிறார்.

பிறந்தது கேரள மாநிலம் ஆலப்புழா. கலாஷேத்திராவில் 5 ஆண்டு வீணை இசை டிப்ளமோ, பி.ஏ., ஆங்கிலம் முடித்துள்ளேன். மலையாளியாக இருந்தாலும் அரசுப்பணி காரணமாக என் பெற்றோர் தமிழகம் வந்தனர். புதுக்கோட்டையில் பள்ளி படிப்பை முடித்தேன். சிவகங்கையில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 படித்தேன். தமிழ் மீது ஆர்வம் உண்டு; பிளஸ் 2வில் தமிழில் அதிக மதிப்பெண் எடுத்தேன். திருப்புகழ், தேவார பாடல்களை எளிமையாக பாட தொடங்கினேன்.

சிவகங்கை ஆக்ஸ்வர்ட் பள்ளி தாளாளர் சியாமளா நான் வீணை இசை கற்க ஆதரவு அளித்தார். எனது ஆஸ்தான குரு அனந்த நாராயணனிடம் 5 ஆண்டு வீணை பயிற்சி பெற்றேன். 2012ல் இருந்தே கச்சேரியில், வீணை இசைத்து வருகிறேன். திருவையாறு ஆராதனை விழாவில் 3 முறை பங்கேற்றுள்ளேன். சங்கீத கலைமகள், 'இளம் கதிர்' சரஸ்வதி, வீணை வாதினி, வீணை இசை தென்றல் போன்ற விருதுகள் கிடைத்துள்ளன.

வெளிநாடு மாணவர்களுக்கு ஆன்லைனில் பயிற்சி அளிக்கிறேன். புதுக் கோட்டையில் வீணை பயிற்சி மையம் நடத்துகிறேன். பிரெஞ்சு, போர்ச்சுகீசியர்களுக்கு கூட ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வீணை பயிற்சி அளிக்கிறேன்.

கலாஷேத்திராவில் குரு குல முறையில் 4 ஆண்டு கர்நாடக இசை கற்றதால், பாடல் வரிகளை உள்வாங்கி, அப்படியே வீணையில் இசைப்பேன். திருவையாறு அரசு இசை கல்லுாரியில் இசை ஆசிரியர் பட்டம் பெற்றேன்.

திரைப்பட பாடல்களை வீணையில் வாசிப்பது பிடிக்கும். இதன் மூலம் ரசிகர்களின் பாராட்டை பெற முடிந்தது.

வீணை மகத்துவத்தை 'ஜென்சி கிட்ஸ்'களிடம் எடுத்து செல்ல எனது பயிற்சி மையத்தில் இளம் வயதினருக்கு முக்கியத்துவம் அளிக்கிறேன்.


இளையராஜா பாடல்களை வீணையில் வாசிப்பது மிகவும் எளிது. எனக்கு விருப்பமான விஷயம் இது. தமிழக, கேரளா கோயில்களில் வீணை இசை கச்சேரிகளை நடத்தி வருவது
எனக்கு பெரும்பேறு.
எனக்கு பாரம்பரிய ஓவியங்களை வரைவது பிடிக்கும். தஞ்சாவூர் ஓவியம், கேரள (மியூரல்) சுவரோவியம், கர்நாடகா, ஆந்திராவை சேர்ந்த மைசூர், கலம்காரி ஓவியங்கள், பெங்களூரூ மதுபன்னி, பிச்சுவாய் போன்ற பாரம்பரிய ஓவியங்களை வரைந்துள்ளேன்.

எனது ஓவியங்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் விற்பனையாகின்றன. ஓவியங்களை பேஸ்புக், இன்ஸ்டா கிராமில் வெளியிட்டேன்.

அவற்றை பார்த்து வெளிநாட்டினர் அதிகம் விரும்பி வாங்கினர். ஆன் லைன் மூலம் மொரீஷியஸ், லண் டன், நியூசிலாந்து, மாணவர்களுக்கும் ஓவிய பயிற்சி அளிக்கிறேன்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை நவதானியங்கள் மூலம் ஓவியமாக வரைந்து, ஜனாதிபதி இல்லத்திற்கு அனுப்பினேன்.
கலாமிடமிருந்து அவரது கையெழுத்திட்ட பாராட்டு கடிதம் வந்து உற்சாகத்தை தந்தது என்றார்.

இன்ஸ்டாகிராம்: veena maidhili subaganesh

Advertisement