புதிய கங்கை நதி நீர் பகிர்வு ஒப்பந்தமே இந்தியாவுடனான உறவை தீர்மானிக்கும்: வங்கதேச அமைச்சர் மிரட்டல்

28

டாக்கா: புதிய கங்கை நதி நீர் பகிர்வு ஒப்பந்தத்தை சார்ந்தே இந்தியாவுடனான உறவு இருக்கும் என, வங்கதேசம் கூறியுள்ளது.

நம் அண்டை நாடான வங்கதேசத்துடனான கங்கை நீர் பகிர்வு ஒப்பந்தம், 1996ம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் தேவகவுடா மற்றும் வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா முன்னிலையில் கையெழுத்தானது. இந்தாண்டுடன் முடிய உள்ளது இந்த, 30 ஆண்டு கால ஒப்பந்தம்.

இதையடுத்து, நீண்ட கால அடிப்படையிலான ஒரு புதிய ஒப்பந்தத்தை உருவாக்க வங்கதேசம் வலியுறுத்தி வருகிறது-.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வங்கதேச அரசியலில் நிகழ்ந்த பல்வேறு மாற்றங்களைத் தொடர்ந்து, இந்தியாவுடனான உறவில் அந்நாடு புதிய நிலைப்பாட்டை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

இது குறித்து அங்கு ஆளும் பி.என்.பி., எனப்படும் வங்கதேச தேசியவாத கட்சியின் பொதுச் செயலரும், அந்நாட்டின் உள்ளாட்சி துறை, ஊரக வளர்ச்சி துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சருமான மிர்சா பக்ரூல் இஸ்லாம் ஆலம்கீர் கூறியுள்ளதாவது:

வங்கதேச மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப, விவாதங்கள் வாயிலாக புதிய கங்கை ஒப்பந்தம் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்ற தெளிவான செய்தியை நாங்கள் இந்திய அரசுக்கு தெரியப்படுத்த விரும்புகிறோம்.

மேலும், இந்தியாவுடன் நல்லுறவு ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு இந்த புதிய ஒப்பந்தத்தை சார்ந்தே இருக்கும். 30 ஆண்டுகால நதி நீர் ஒப்பந்த புதுப்பித்தலில் நிலவும் நிச்சயமற்ற தன்மை, எதிர்கால நதிநீர் பகிர்வு குறித்த கவலைகளை ஏற்படுத்தி உள்ளது.

புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை தற்போதைய ஒப்பந்தமே அமலில் இருக்க வேண்டும்.

அண்டை நாடுகளுக்கு இடையே எதிர்காலத்தில் ஏற்படும் நதிநீர் பகிர்வு ஒப்பந்தங்கள் ஒரு குறிப்பிட்ட கால வரம்புக்குள் மட்டும் மட்டுப்படுத்தக்கூடாது.

வங்கதேசத்தின் 17 கோடி மக்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் தங்களின் வாழ்வாதாரம், பல்லுயிர் பெருக்கம் மற்றும் பல கிளை நதிகளுக்கான நீர் வினியோகத்துக்கு இந்த நீரையை நம்பியுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement