பல்லவ மன்னர்களின் செப்பேடுகள்: ஸ்காட்லாந்தில் இருந்து மீட்க முயற்சி

13

நமது நிருபர்



காஞ்சிபுரத்திலிருந்து ஆட்சி செய்த முற்காலப் பல்லவ மன்னர்களான விஷ்ணு கோபவர்மன் மற்றும் சிம்மவர்மன் ஆகியோரால் வெளியிடப்பட்டவை உட்பட 7 செப்புத் தகடுகளை ஸ்காட்லாந்திலிருந்து மீட்டு கொண்டு வர இந்தியத்தொல்லியல் துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது.

11ம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆனைமங்கலம் சோழர் செப்பேடுகள், கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலாக நெதர்லாந்து நாட்டில் பாதுகாப்பில் இருந்த நிலையில், இந்தியாவிடம் முறைப்படி திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன. இது நெதர்லாந்து நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடியின் மூலம் சாத்தியமானது.

இதே போன்ற வரலாற்று ஆவணங்கள் வேறு எந்தெந்த நாடுகளில் உள்ளன என்று தொல்லியல் துறை ஆய்வு மேற்கொண்டுள்ளது. முதல் கட்டமாக, பல்லவ மன்னர்களின் செப்பேடுகள் எடின்பரோ நகரில் இருப்பதை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரத்திலிருந்து ஆட்சி செய்த முற்காலப் பல்லவ மன்னர்களான விஷ்ணு கோபவர்மன் மற்றும் சிம்மவர்மன் ஆகியோரால் இந்த செப்பேடுகள் வெளியிடப்பட்டுள்ளன.

அரிய வரலாற்று தகவல்களை கொண்ட இந்த 7 செப்புத் தகடுகளை ஸ்காட்லாந்திலிருந்து மீட்டு கொண்டு வர தொல்லியல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கி.பி. 4ம் நூற்றாண்டு முதல் 16ம் நூற்றாண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்தவை எனக் கருதப்படும் இந்தச் செப்பு தகடுகள், எடின்பரோ பல்கலைக்கழக நூலகத்தில் உள்ளன. தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியதாவது:

இந்த ஏழு செப்புச் சாசனங்களும் 19ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் தொல்பொருள் ஆய்வாளர் சர் வால்டர் எலியட்டால் ஆந்திராவில் இருந்து 6 தகடுகளும், குஜராத்தில் இருந்து ஒரு தகடும் சேகரிக்கப்பட்டன. இந்தச் செப்பு தகடுகள், நமது நாட்டின் விலைமதிப்பற்ற கலாசாரப் பொக்கிஷமாகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு கி.பி. 250 முதல் 575 வரை ஆட்சி செய்தவர்கள் முற்காலப் பல்லவ மன்னர்கள்.

Advertisement