சொல்கிறார்கள்
சொல்கிறார்கள்/ 19/05/26 செவ்வாய் இதழ்
-–––––––
குமுதம் மண்வாசனை மார்ச் 2026 பக்: 05
இயற்கை விவசாயத்தில்
இரட்டை வருமானம்
–––––––––
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள மூலையூர் கிராமத்தை சேர்ந்த கண்ணன்:
நான் இயற்கை விவசாயம் செய்கிறேன். எப்போதும் பிரதான பயிரோடு சேர்த்து ஊடுபயிரும் வளர்ப்பது தான் புத்திசாலித்தனமான விவசாயம். இதன்படி வாழை, பச்சை காய்கறிகள், கொடி வகைகள், படரும் செடிகளை விதைத்து விவசாயம் செய்து வருகிறேன்.
புடலங்காய் கொடிகளை தரையில் படரவிட்டபடி, வாழைக் கன்றுகளை நட்டுள்ளேன். ஒன்று கைவிட்டாலும் இன்னொன்று தாங்கி பிடிக்கும். இன்னொரு விஷயம், பந்தல் காய்கறிகளை தரையில் படர விடுவதன் வாயிலாக, பந்தல் அமைப்பு எனும் பெரிய செலவும் தவிர்க்கப்படுகிறது.
முறையாக கவனித்து வளர்த்தோம் எனில், 60வது நாளில் புடலங்காய்கள் பறிப்புக்கு வந்து விடும். காயின் நிறம் பச்சையில் இருந்து மாறி, முழுமையாக வெள்ளையாகும் தருணத்தில் பறித்து விடலாம். அரை ஏக்கரில் முதல் பறிப்பில், கிட்டத்தட்ட 25 கிலோ காய்கள் கிடைக்கும்.
இது கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து, கிட்டத்தட்ட, 250 கிலோ காய்கள் கிடைக்கும். பொதுவாக, ஒரு நாள் விட்டு ஒரு நாள் காய்களை பறிப்பதால், அதிக மகசூல் கிடைக்கும். விளைச்சல் காலம் முடிந்து காய்ப்பு குறைந்ததும், நிலத்தை மறு விதைப்புக்கு சீர்செய்ய வேண்டும்.
ரசாயன உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்த காலத்தில், புடலை கொடிகள் நான்கு மாதங்கள் காய்க்கும். ஆனால், இயற்கை விவசாயம் செய்ய துவங்கிய பின், ஆறு மாதங்கள் கடந்த பின்னும் கூட விளைச்சல் கொடுக்கிறது.
இயற்கை விவசாய பொருட்களை மட்டுமே விற்கும் கடைகளுக்கு, எங்கள் நிலத்தில் விளைந்த காய்கறிகளை விற்பனை செய்கிறோம். புடலங்காயை பொறுத்தவரை நல்ல விலை கிடைக்கும். அதிகபட்சமாக கிலோவுக்கு, 45 ரூபாய் கொடுப்பர்; அது மிகப்பெரிய தொகை.
அதனால், இயற்கை புடலங்காய் விதைத்த வகையில், எனக்கு அருமையான லாபம்தான். பந்தல் செலவு இல்லை, களை எடுக்காமல் விட்டாலும் பெரிய தொல்லை இல்லை. உரம், பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி என்றும் பணம் செலவழிக்க தேவையில்லை.
இது மட்டுமில்லை; அடுத்து, வாழைகளும் நன்கு வளர்ந்து அதன் வாயிலாகவும் லாபம் வர துவங்கி விடும். ஒவ்வொரு பயிரும் சக பயிருக்கு தன்னாலான சத்துக்களை கொடுத்து, சிறப்பான வளர்ச்சிக்கு உதவும். அதன்படி புடலங்காயின் சத்துக்கள், வாழையை, ‘தளதள’வென்று வளர வைக்கிறது.
***
*