தேர்தலுக்கு பிறகு கூட்டணி மாறுவதை நியாயப்படுத்த முடியாது; சொல்கிறார் திருமா

29

சென்னை: தேர்தலுக்கு பிறகு கூட்டணி மாறுவதை நியாயப்படுத்த முடியாது என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டி: தேர்தலுக்கு பிறகு கூட்டணி மாறுவதை நியாயப்படுத்த முடியாது. 7,8 வருஷமாக அவர்களுடன் சேர்ந்து பயணித்து இருக்கிறோம். அவர்களின் ஓட்டும் சேர்ந்து தான் நாம் வெற்றி பெற்று இருக்கிறோம். அவர்களுடைய உழைப்பு இங்கே இருக்கிறது.
ஸ்டாலின் தான் முதல்வர் என்ற கருத்தை வைத்து தான் நாம் இந்த ஓட்டை வாங்கி இருக்கிறோம். இன்னும் தெளிவாக சொல்லப் போனால் தவெகவுக்கு எதிரான ஓட்டு தான் இது என்பதை நாம் உறுதிப்படுத்துகிறோம்.

அதிமுகவுக்கு எதிராக இருந்தாலும், இது தவெகவுக்கும் எதிரான ஓட்டு தான். இப்படி இருக்கும் போது நாம் கூட்டணிக்கு தாவுவது குறித்து நெருடல் இருக்கிறது. அதனால்தான் நாம் உடனடியாக இந்த முடிவை எடுப்பது இல்லை. ஒரு விரிவான ஆலோசனை தேவைப்பட்டது.
கட்சியினர் மத்தியில் இது பற்றி விரிவாக பேச வேண்டிய தேவை இருந்தது. அதற்காக நாங்கள் எடுத்துக் கொண்ட கால அவகாசம் தான் இது. அது ஒரு பெரிய தாமதமே கிடையாது. நாங்கள் தவெகவுக்கு ஆதரவு கொடுப்பது குறித்து மிக மிக அவசரப்பட்டு தான் முடிவு எடுத்து இருக்கிறோம். தாமதமே கிடையாது.

அவர்கள் ஜனாதிபதி ஆட்சி வரும் என்று தமிழக வெற்றிக் கழகத்தை அவசரப்படுத்துகின்றனர். நாங்கள் சொன்னதன் அடிப்படையில் இடதுசாரி கட்சிகள் முடிவு அறிவித்துவிட்டது நீங்கள் ஏன் சொல்லவில்லை என்று சொல்கின்றனர். இதற்கு இடையே இருக்கும் சூழல்கள் குறித்து யாரும் சிந்திக்கவில்லை. நான் ஒரு கட்சி நடத்துகிறேன். கட்சிக்குள் பல கருத்து இருக்கிறது. அது ஒரு விவாதத்துக்குரிய கருத்துக்கள். அதையெல்லாம் விட்டுவிட்டு நீங்கள் எடுத்த உடனே அறிவிக்க வேண்டும் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

Advertisement