40 ஆண்டுகளில் நார்வே சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி

11

ஓஸ்லோ: அரசு முறைப் பயணமாக நார்வே சென்றுள்ள பிரதமர் மோடி, கடந்த 40 ஆண்டுகளில் அந்த நாட்டுக்குச் சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, நெதர்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, நார்வே சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்மூலம், 40 ஆண்டுகளுக்குப் பிறகு நார்வே சென்ற இந்தியப் பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில்; நார்வே நாட்டின் ஓஸ்லோ நகருக்கு வந்தடைந்துள்ளேன். விமான நிலையத்தில் எனக்கு அன்பான வரவேற்பளித்த நார்வே பிரதமர் ஜோனாஸ் கர்ருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 40 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் நார்வே நாட்டிற்குப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். இந்தப் பயணம் இந்தியா - நார்வே இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இப்பயணத்தின் போது, நான் நார்வே மன்னர் ஐந்தாம் ஹெரால்ட் மற்றும் ராணி சோன்ஜா ஆகியோரைச் சந்திக்கவுள்ளேன். மேலும், பிரதமர் ஜோனாஸூடன் இருநாடுகளுக்கு இடையேயான உறவு குறித்து பேச்சுவார்த்தையும் நடத்தவுள்ளேன், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாளை ஓஸ்லோவில் நடைபெற இருக்கும் இந்தியா - நார்வே உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார். இந்த மாநாட்டில் டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் ஸ்வீடன் நாட்டு பிரதமர்களுக்கு பங்கேற்க இருக்கின்றனர்.

Advertisement