திருப்போரூரில் கூட்டு குடிநீர் திட்ட பணிகள்: கலெக்டர் ஆய்வு

திருப்போரூர், மே 20–

திருப்போரூர் பேரூராட்சியில் 46 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வரும் கூட்டு குடிநீர் திட்டபணிகள் மற்றும் பேரூராட்சி அலுவலக கட்டுமான பணிகளை செங்கல்பட்டு கலெக்டர் நேற்று ஆய்வு மேற்கொண்டு விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

திருப்போரூர் பேரூராட்சியில் திருப்போரூர், கண்ணகப்பட்டு, காலவாக்கம், மேட்டுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கி உள்ளன.

இங்கு, 30,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இதுதவிர திருப்போரூர் பேரூராட்சியில் சார் பதிவாளர் அலுவலகம், கந்தசுவாமி கோவில், பேரூராட்சி அலுவலகம், தாலுகா, பி.டி.ஓ., அலுவலகம், காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் உள்ளன.

திருப்போரூர் பேரூராட்சியின் குடிநீர் தேவைக்காக சிறுதாவூர் ஏரி அருகே ஐந்து கிணறுகள் அமைத்து குடிநீர் கொண்டு வரப்பட்டு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் செம்பாக்கம் ஏரியில் குடிநீர் கிணறு அமைத்து குடிநீர் கொண்டுவரப்பட்டது.

அதனை தொடர்ந்து கொண்டங்கி ஏரியிலிருந்தும் கிணறுகள் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு, மேற்கண்ட பகுதிகளிலிருந்து திருப்போரூர் பேரூராட்சிக்கு, தினமும் 12 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருப்போரூர் பேரூராட்சி பகுதிகள் நாளுக்கு நாள் அசூர வளர்ச்சி அடைந்து வருகிறது.

எனவே, மக்கள் தொகை அதிகரிப்பு, அவர்களின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு, கூடுதலாக குடிநீர் வழங்க அரசு நடவடிக்கை எடுத்தது.

இதற்காக, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 45 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், 32 கி.மீ., குடிநீர் குழாய் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வல்லிபுரம் பாலாற்றில், ஐந்து புதிய கிணறுகள், திருக்கழுக்குன்றத்தில் ஒரு தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி, திருப்போரூர் பேரூராட்சி உட்பட்ட பகுதிகளில் 7 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது அதற்கான கட்டுமான பணிகள் கடந்தாண்டு தொடங்கி நடந்து வருகின்றன.

அதபோல், திருப்போரூர் பேருந்து நிலையம் அருகே 98 லட்சம் ரூபாயில் பேரூராட்சி அலுவலகம் கட்டும் பணி கடந்தாண்டு ஜூலை 31ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

இந்நிலையில், மேற்கண்ட கட்டுமான பணிகளை செங்கல்பட்டு கலெக்டர் மாலதி ஹெலன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

திருப்போரூர் பேரூராட்சி அலுவலர் தேவராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் சங்கீதா, திருப்போரூர் தாசில்தார் ஆறுமுகம், பேரூராட்சி தூய்மை அலுவலர் ரகுபதி, திருப்போரூர் வருவாய் ஆய்வாளர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Advertisement