மசினகுடி மாயார் சாலையில் உலா வரும் புலிகள்: இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை

கூடலுார்: 'முதுமலை, மசினகுடி - மாயார் சாலையில், உலா வரும் புலிகளுக்கு இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி வனப்பகுதி பசுமைக்கு மாறி உள்ளது. இங்கு வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், முதுமலைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால், இவர்கள் மாயார் பகுதிகளுக்கு சுற்றுலா வாகனங்களில் சவாரி செல்கின்றனர். சிலர் யானை, புலி, கரடி இவற்றை கண்டால், வாகனங்களை நிறுத்தி இடையூறு செய்கின்றனர்.

இப்பகுதியில் உள்ள மாயார் சாலையில் கடந்த இரு நாட்களாக, புலிகள் உலா வருகின்றனர். சுற்றுலா பயணிகள் பலர் இதனை பார்த்து வியந்தனர். இதனால், சுற்றுலா பயணிகள் கூட்டம் இப்பகுதியில் அதிகரித்துள்ளது.

மசினகுடி வனச்சரகர் ராஜன் கூறுகையில்,''முதுமலை மாயார் சாலையில் பயணிப்பவர்கள், விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் வாகனங்களை இயக்க வேண்டும். விலங்குகள் அருகே வாகனங்களில் நிறுத்தி 'போட்டோ' எடுத்து இடையூறு ஏற்படுத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்,'' என்றார்.

Advertisement