செங்கல்பட்டில் சுங்கச்சாவடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு:பரனூர் சுங்கச்சாவடியில் தடையற்ற நிறுத்தமில்லா சுங்கக் கட்டண நடைமுறையை கைவிடக்கோரி செங்கல்பட்டு பழைய பேருந்து நிறுத்தம் அருகில் சுங்கச்சாவடி ஊழியர்கள் (மே 19) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு அடுத்த பரனுார் சுங்கச்சாவடியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக 140க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்த சுங்கச்சாவடியில் 'மல்டி லைன் ப்ரீ ப்ளோ' எனப்படும் ஒரு தடையற்ற நிறுத்தமில்லா சுங்கக்கட்டண முறையை நடைமுறை படுத்தும் பணி நடந்து வருகிறது. இதன் மூலம் 'பாஸ்ட் டேக்' மற்றும் தானியங்கி வாகன பதிவெண் தொழில் நுட்பத்தின் வாயிலாக சுங்கக் கட்டணங்கள் வசூலிக்கப்படும்.

இத்திட்டத்தால், சுங்கச்சாவடி ஊழியர்கள் வேலை இழக்க நேரிடும். இதனால் 'மல்டி லைன் 'ப்ரீ ப்ளோ' முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுங்கச்சாவடி ஊழியர்கள் (மே 19) காலை செங்கல்பட்டு பழைய பேருந்து நிறுத்தம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் சுங்கச்சாவடி ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த திட்டத்தை நிறுத்த வேண்டும் என கூறி கோஷங்களை எழுப்பினர்.

கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், அடுத்த கட்டமாக தமிழகம் முழுக்க போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தனர். இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடி ஊழியர்கள் பங்கேற்றனர்.

Advertisement