பந்தலுார் பகுதிக்கு அடிப்படை வசதிகள் அவசர அவசியம்: வியாபாரிகள் சங்கத்தினர் கமிஷனரிடம் மனு

பந்தலுார்: பந்தலுார் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், நெல்லியாளம் நகராட்சி கமிஷனர் சக்திவேலுவிடம் அளித்த மனு:

தாலுகா தலைநகரான பந்தலுாரில், சாலையோர நடைபாதைகள், வாகன பார்க்கிங் தளம், தரமான கால்வாய் மற்றும் நடைபாதை அமைத்து தரவும், பயனற்ற வாட்டர் ஏ.டி.எம்., இயந்திரத்தை அகற்றவும் வலியுறுத்தி பலமுறை புகார் கொடுத்தும் தீர்வு கிடைக்கவில்லை.

மேலும், குப்பைகள், இறைச்சி, மீன் கழிவுகளை தினசரி அகற்ற வேண்டும். நகராட்சி வணிக வளாகத்தில், வியாபாரிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வாகனங்கள் நிறுத்துவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட அனைத்து பகுதிகளின் வளர்ச்சிக்கு நகராட்சி நிர்வாகம் தனி கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கமிஷனர் சக்திவேல் கூறுகயைில்,''வியாபாரிகள் சங்கத்தின் கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும். உரிய நிதி பெற்று வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளவும், வாகன பார்க்கிங் தளம் அமைக்க மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறைகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும்,''என்றார்.

Advertisement